tamilnadu

img

ஒன்றிய அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,மார்ச்.10- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கை குறித்து மக்களவையில் பேசுகையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரீகமானவர்கள் என பேசி பின்னர் கடும் எதிர்ப்புக்கு பிறகு அவரது பேச்சைத் திரும்பப்பெற்றுக் கொண்டார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.