சென்னை, மே 11- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1500 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, 1500 ஆசிரியர்களின் பணிநீக்கத்தைத் தவிர்க்க ஜூனில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில், 1500 ஆசிரியர்களும் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி வழங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது.இதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குறுகிய கால பயிற்சிக்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரியை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆசிரியர் தகுதித் தேர்வில் கருத்தாளர்களாக செயல்பட்ட முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களைக் கொண்டு 1500 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.