சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள் அக்ஷயா மற்றும் ஹரிஜான் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை முடியும் இடத்தில் நேற்று காலை வடமாநில இளைஞர் ஓருவர் நின்றிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அங்கு பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் அந்த இளைஞரிடம் நடைமேடை டிக்கெட் கேட்டுள்ளார். இதற்கு, ரயில்வே எல்லையை ஓட்டிய பகுதியில் நின்றதாகவும், அபராதம் செலுத்துவதற்கு தன்னிடம் பணம் ஏதும் இல்லை எனவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளார்.
அப்போது, பாலத்தின் அருகே தான் நின்றதாக அந்த இளைஞர் வாக்குவாதம் செய்ய ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா இளைஞரை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து, இளைஞரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள் அக்ஷயா மற்றும் வேடிக்கை பார்த்த தலைமை டிக்கெட் பரிசோதகர் ஹரிஜான் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.