உளுந்தூர்பேட்டை, ஜூலை 3- விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு பல ஆண்டுகாலமாக வழங்க வேண்டிய பாக்கித் தொகை 45 கோடி ரூபாயை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அந்த ஆலை முன்பு மாநில பொருளாளர் எம்.சின்னப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், சங்கத்தின் கௌரவத் தலைவர் கே.எம்.ஜெயராமன், தலைவர் சாரங்கபாணி, செயலாளர் எஸ்.ஜோதிராமன், பொருளாளர் கொடியான் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பின்னர் ஆலையின் நிர்வாக இயக்குனரிடம், விவசாயிகள் தங்களுக்கு தரவேண்டிய பாக்கித் தொகையை வழங்குமாறு மனுக்களை அளித்தனர்.