உணவு பொருட்கள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி-யை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
மக்கள் விரோத ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து புதனன்று (பிப்.8) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
அதானி, அம்பானி நலன் காக்கும் வகையில் ஒன்றிய பட்ஜெட் உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பட்ஜெட் இல்லை. கிராமப்புற ஏழைகள், நிலமற்ற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்தாண்டு 89ஆயிரம் கோடியாக இருந்ததை, 60ஆயிரம் கோடியாக (33 விழுக்காடு) குறைத்துள்ளனர்.
விவசாயத்தை பாதுகாக்க அறிவிப்பு ஏதும் இல்லை. உர மானியம், விவசாயிகளுக்கான உதவித்தொகை ஒதுக்கீட்டையும் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரத்திற்கு செலவாகும் தொகையில் 67 விழுக்காட்டை மக்களும்,33 விழுக்காட்டை அரசும் செய்கிறது. இவற்றிற்கான ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில், சிறுகுறு நிறுவனங்கள் 60 விழுக்காடும், உற்பத்தியில் 50 விழுக்காடும் பங்களிப்பு செய்கின்றன. இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை 6லிருந்து 10 விழுக்காடாக உயர்த்தி உள்ளனர். கச்சா பொருட்களின் விலையை கட்டுப்படுத்தாமல் உள்ளனர். சிறு, குறு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரே அளவில் வரி விதிக்கின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களை விட, ஏழை, நடுத்தர மக்கள் 6 மடங்கு அதிகமாக மறைமுக வரியை செலுத்துகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் அரசு, ஏழை, நடுத்தர மக்களை வஞ்சிக்கிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி வீழ்ந்துள்ளது. அதானி கம்பெனிகளில், எல்ஐசி 80ஆயிரம் கோடி, எஸ்பிஐ 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பாதிக்கும் அதானியின் முறைகேடுகள் குறித்து பிரதமர், செபி, ரிசர்வ் வங்கி வாய் திறக்க மறுக்கின்றன. அதானி பெயரை சொன்னாலே பாஜக பதறுகிறது. குஜராத் கலவரத்தை அதானி ஆதரித்தார். எனவே, அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கின்றனர்.
மக்களை பாதுகாக்க உணவு பொருட்கள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்கியதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலதன குவியல் செய்யும் பட்ஜெட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில், “இடதுசாரிகளால் கொண்டுவரப்பட்ட 100நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு உருக்குலைக்கிறது. 2006ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே 60ஆயிரம் கோடியைத்தான் தற்போதும் ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை, ஏற்கெனவே செய்த வேலைக்கான கூலி பாக்கியை தர செலவிட உள்ளனர். இதன்வாயிலாக கிராமப்புறங்கள் மீது பெருந் தாக்குதலை ஒன்றிய அரசு தொடுத்துள்ளது” என்றார்.
“கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் மேலும் செல்வம் குவிப்பதற்கும், மூலதன பெருக்கத்திற்கும் வழிவகுக்கும் வகையில் ஒன்றிய பட்ஜெட் அமைந்துள்ளது. இதனை மறைத்து, ஆட்சியாளர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர். விவசாயம், கல்வி, சுகாதாரத்தை தொடர்ந்து சமூக நலத்திட்டங்களுக்கான நிதியையும் வெட்டியுள்ளனர்.
மூலதன கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்குவதாக கூறுகிறார்கள். அதாவது, மக்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புகளை உருவாக்க செலவிடாமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு செலவுகள் செய்யப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
“ வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் நசிந்துள்ளன. இந்நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்து, புதிய கடன் வழங்க உரிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட் மற்றும் நவீன தாராளமயக் கொள்கை பாதிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வோம்” என்றும் அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை தாங்கினார். சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ், பகுதிக்குழு உறுப்பினர் கே.மணிகண்டன், 123வது வார்டு கவுன்சிலர் எம்.சரஸ்வதி உள்ளிட்டோர் பேசினர்.