tamilnadu

img

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம்: ததீஒமு அறிவிப்பு

பொதுவுடைமை இயக்க தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் நிலம், மனை, பட்டா, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான  நேரடி களப் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ததீஒமு மாநில தலைவர் த.செல்லகண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தஞ்சைத் தரணியில்  பொருளாதார, சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக களம் கண்ட   பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் பட்டியல் சாதி மக்களின் நிலம் உரிமை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் நேரடி களப்போராட்டங்களை செப் - 30 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தமிழ்நாடு முழுவதும் நடத்துகிறது.

தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம்,  மஞ்சநாயக்கனஅள்ளி, கலப்பம்பாடி ஆகிய ஊராட்சியை சேர்ந்த பட்டியலின மக்கள் 353 பேருக்கு வீட்டு மனை கேட்டு நிலத்தில் குடியிருக்கும் போராட்டம் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், பூவந்தி (சர்வே எண் 65/1C), மடப்புரம் (சர்வே எண் 145/1C) ஆகிய கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி  மாநிலத்தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் நிலத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணம் ஆதிதிராவிட மக்களின் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரா.சரவணன் பங்கேற்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், சிறுபுழல்பேட்டை - எம்.ஜி.ஆர்.நகர், பில்லாங்குப்பம், மேல்முதலம்பேடு ஆகிய 3 பகுதிகளில் உள்ள பட்டியலின மக்களுக்கு பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநில பொருளாளர் இ.மோகனா தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் பட்டியலின மக்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தை அளந்து கொடுக்காததால் நிலத்தை கைப்பற்றும் போராட்டம் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு மற்றும் துணைத்தலைவர் ஜி.ஆனந்தன் தலைமையில் நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில் தெரு பட்டியலின மக்களுக்கான மயானப் பாதையில் உள்ள தீண்டாமை சுவரை அகற்றும் போராட்டம் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையில் நடைபெறுகின்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வது வார்டு திருவள்ளுவர் நகர், நெசவாளர் காலனி பட்டியலின மக்களின்  மயானத்திற்கு பாதை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தோப்பூர் அருந்ததியர் மக்களின் குடியிருப்பிற்கும், ஈரோடு தாலுகா ஊனாட்சிபுதூர் பட்டியலின மக்களின் குடியிருப்பிற்கும் பட்டா,பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பின்னலாடை தொழில் கூடங்களை செயல்படுத்திடவும், அந்தியூர் வட்டம், மைக்கேல்பாளையம் கிராம் க.மேட்டூர், இந்திரா நகர், வையங்குட்டை, பாறையூர் பட்டியலின மக்களின்  மயான ஆக்கிரமிப்பை அகற்றிடவும்,  வேம்பத்தி கிராமம், கூலிவலசில் அருந்ததியர் மக்கள் குடியிருப்பு பகுதியில் நீர் வழித்தடத்தை அழித்து நில உடமையாளருக்கு வண்டித்தடம் அமைப்பதை கைவிட உள்ளிட்ட  கோரிக்கைகளுடன்  அ.இ.வி.தொ.ச பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சேவுகம்பட்டி தலித் அருந்ததியர் மக்களுக்கு வழங்கிய பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி நிலத்தில்  காத்திருக்கும் போராட்டம் டி.ஒய்.எப்.ஐ மாநிலச் செயலாளர்  ஏ.வி.சிங்காரவேலன் தலைமையில் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் நடைபெறுகிறது.

மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றியம், தொட்டப்பநாயக்கனூர் ஆதிதிராவிட மக்களுக்கு    வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி நிலத்தில் மாநில செயலாளர்கள் செ.முத்துராணி, எம்.பாலசுப்பிரமணியன் தலைமையில் குடியேறும் பேரராட்டம் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம், ராமாபுரம் சமத்துவ புரத்திற்கு மயான வசதியும், புவனகிரி வட்டம், ஜெயங்கொண்டான் மற்றும் மருதூர் கிராம அருந்ததிய மக்களுக்கு மயான வசதியும் கேட்டு மாநில செயலாளர் பழ.வாஞ்சிநாதன் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பொற்பனங்கரணை கிராமத்தில் ஆதிதிராவிட மக்களின் மயான பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் போராட்டம் AIDWA மாநில  தலைவர் வாலண்டினா தலைமையில் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் கிராமத்தில்  பழங்குடியின மக்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வலியுறுத்தி அ.இ.வி.தொ.ச மாநில செயலாளர் வி.மாரியப்பன் தலைமையில் இயக்கம்  நடைபெறுகிறது.

என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்   தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.