tamilnadu

தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வு

சென்னை, மே 29-தனியார் பால் விலை ஜூன் 1 ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5 தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து இவைகள் பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தரம் பிரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்றன.ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. ஹட்சன் (ஆரோக்கியா), ஹெரிட்டேச், டோட்லா, ஜேசி, திருமலா போன்ற ஆந்திர மாநில பால் நிறுவனங்களும் போட்டி போட்டு பால் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவாக விற்கப்படுகிறது. ஆவின் பால் புல்கிரீம் லிட்டர் ரூ.45, சமன்படுத்தப்பட்ட பால் ரூ.37க்கு விற்கப்படுகிறது.இந்த நிலையில் தனியார் பால் விலை ஜூன் 1 ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன. கொள்முதல் விலையை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.ஆரோக்கியா புல்கிரீம் லிட்டர் பால் ரூ.54-ல் இருந்து ரு.56 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப் பட உள்ளது. ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.52-ல் இருந்து ரூ.54 ஆகவும் உயருகிறது.தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. இந்த வருடத்தில் விலை உயர்வு இரண்டாவது முறையாகும்.