தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
இந்தியா முழுவதும் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணியாற்ற முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் அகில இந்திய அளவில் நடைபெற்று வருகிறது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்நேரத்தில் தேசிய தேர்வு முகமை நடத்தும் பி.எட் மாணவர்களுக்கான Swayam ( ஸ்வயம்) தேர்வுகள் வரும் டிசம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது . இத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத கல்வியியல் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு செய்யாத தேர்வு மையங்களான பக்கத்து மாநிலங்களான கர்நாடகா , கேரளா மாநிலங்களில் பல நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் கல்வியியல் கல்லூரி மாணவர்களால் ஸ்வயம் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வுக்காக அண்டை மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள். குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து மட்டும் 50 மாணவர்களுக்கு கர்நாடகத்தின் மைசூர் , மங்களூர் , பெங்களூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிக்கிறது. இது எவ்வளவு அராஜகமானது . தேர்வுக்கான தெளிவான மனநிலையையே சிதைக்கும் சதியைப் போன்றது இந்த நடைமுறை .
ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை நடத்தும் ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் , கல்வியியல் படித்து வரும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழ்களை பெற முடியும் என்கிற இக்கட்டான நிலையில் இப்படியான நிகழ்வுகளை ஒரு போதும் தற்செயலானதாக பார்க்க இயலாது.
தொடர்ந்து பல்வேறு ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகள் , நுழைவுத் தேர்வுகள் என அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவது தொடர் கதையாக மாறி வருகிறது. இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்புகளின் மீது நடத்தப்படும் திட்டமிடப்பட்ட தாக்குதலாக தெரிகிறது.
வாய்ப்புகளின் வாசலை அடைத்து விட்டு வசந்தத்தைப் பேசும் நிறுவனங்களாக ஒன்றிய அரசின் அனைத்து நிறுவனங்களும் மாறியுள்ளன. இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும். வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவது குறித்த சிரமங்கள் குறித்த அடிப்படையான புரிதல்கள் கூட இல்லாமலா தேர்வு முகமைகள் செயல்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.
எனவே வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கிட வேண்டும் என தேசிய தேர்வு முகமையை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்
