சீறிய தீயின்கொ ழுந்துகள் ஏறி
விண்மே மேல்முகட்டைப்பிடிக்க
சூரியப் பந்துகளாக எழுந்து
சுழன்று சுழன்றடிக்க,
ஊறிய கண்களின் ஊற்று கொண்டே உடல்
உஷ்ணத்தி னைத் தணிக்க
ஓலமிட் டேஅழும் மக்கள்குரல் புவிக்
கோளத்தி னைப்பிளக்க,
ரத்தப் புயலென சுற்றிச் சுழன்று
செந் தீ மழை சாடியதே -அது
ராட்சசத் தாண்டவம் இட்டொரு
பேய்வெறி நாட்டியம் ஆடியதே.
ஊழிப் பிரளயம் பொங்குதல்
ஆகிவழிந்து விழுந்திடினும்,
ஏழுச முத்திரம் பொங்குதல் ஆகி
எழுந்து பொழிந்திடினும்,
ஓங்கும் இமாலயக் குன்றுகள் நூறு
நொறுங்கி உருகி அங்கே
ஓராயிரங் கங்கை ஆறாகி வீதியில்
ஓடிய போதினிலும்,
உக்கிரம் கொண்டெழுந் தோங்கி எரிந்தது
ஓ என வெண்மணியே- இந்த
அக்கிர மக்கொடுங் கோன்மைமையினால் சிவப்பானதெம் கண்மணியே.
எண்ணெய் உண்ணாமல் விளக்குகள் ஏங்கிடும் இந்தியச் சேரிகளை
எத்தனை எத்தனை யோயுகமாய்
அரசாள்கிற காரிருளை
இதயத்தில் பூத்தஓர் உதயத்தினால்
பலிகொள்ள முயன்றவரை
சிதைத்து வதைத்து ரத்தத்தினை
நெய்யென ஊற்றி ஓர் தீபத்தினை
தேகங்களைத் திரியாய் திரித் தேற்றினர்
வெண்மணி வீதியிலே -இந்த
தேசமெங் கும்ஜொலிப் பாகியதே அந்த
தீபத்தின் ஜோதியிலே.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் வெறும்
அடிமை ஜென்மங்களாய்
ஆக்ரோஷ விம்மல் வெடித்து வெடித்து
விசும்பிய காரணத்தால்
கோப நெருப்புகள் கொப்பளிக்கும் விழிக்
கண்திறந்தார்; அதனால்
கோர விரல்களை கொள்ளிகள் ஆக்கி
அக்கண்களைக் குத்தி விட்டார்.
உக்கிரம் கொண்டெழுந் தோங்கி எரிந்தது
ஓ என வெண்மணியே- இந்த
அக்கிர மக்கொடுங் கோன்மையினால் சிவப்பானதெம் கண்மணியே.
முப்புரத் தில்சிவன் நெற்றிக்கண்ணால் அன்று மூட்டிய தீயினையும்,
கைப்புறம் கொண்ட வில்லால்
விஜயன் வைத்த காண்டிபத் தீயினையும்,
அப்புறம் லங்கையில் அனுமன் வைத்திட்ட
அக்கினித் தீயினையும்,
இப்புறம் கொண்டுவந் தேநிலப் பிரபுத்வம்
வெண்மணி யில்வைத்திடும்.
திக்குகள் யாவும் ஒளிப்பிழம் பாய்பொழு
தென்று விடிந்திடுமோ?- நாங்கள்
ஜென்மஜென் மாந்திர மாகப் படும் துயர்
என்று முடிந்திடுமோ?
வெண்மணி (தீக்குளியல்)
நீள் கவிதையிலிருந்து...