2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) இணைந்தது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று, 2026 தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
இக்கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்தையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! வெல்வோம் ஒன்றாக!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.