விழுப்புரம், டிச. 23- விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியம் சத்திய கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி பூவழகி. இவர்களது மகன் திருமலை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென திருமலை இறந்து விட்டான். தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதே கிராமத்தைச் சேர்ந்த கேசவன், மங்கையர்கரசி தம்பதியினர் தனது மகனை அடித்து கொலை செய்து விட்டதாகவும் கூறி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் நான்கு முறைக்கு மேல் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து திங்களன்று (டிச. 23) நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு கொடுக்க வந்த தம்பதியினர் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தாலுகா காவல் துறையினர் அவர்களை காவல் நிலையதிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.