பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய கலைஞர்களை கவுரவிக்கும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும். கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் வழங்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் மு.மேத்தா மற்றும் திரைப்பட்ட பின்னணி பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விருதுகளை நடிகை எம்.என்.ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி சிறப்பித்தார்.
