tamilnadu

img

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது!

கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு, 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில் மூன்று நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பொதுமக்களின் பிரதான எதிர்பார்ப்பு மின்சார ரயில்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதுதான். இதனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.

தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு, 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில் , மூன்று நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகம், டிக்கெட் அலுவலகம் ,குடிநீர் வசதி, இருக்கை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே நடைமேடைகளில் சிறுசிறு கடைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ரயில் நிலையம் என்பதால் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் கிளம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கூடுதலாகப் பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு வருவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு , அதற்கு ஏற்றார் போல் 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சார ரயில்களை , சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ‘எக்ஸ்குலெட்டர்’ வசதியுடன் கூடிய நடை மேம்பாலத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் எளிதாக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைய முடியும்.

இப்பணிகள் முழுமை அடையும் பொழுது, சென்னை மையப் பகுதியில் இருக்கும் பயணிகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதில் அடைய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அமைவது மட்டுமில்லாமல், பயணிகளுக்குப் பெரிய அளவில் பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.