செங்கல்பட்டு,டிச.17- உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய சுடுகாடு வேண்டி பொது மக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில் கல்வாரி நகர் பகுதியில் சுமார் 45 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிரந்தர சுடுகாடு இல்லாததால் இறந்தவரின் உடலை அருகிலுள்ள ஏரி புறம்போக்கு பகுதியில் ஈமசடங்குகளை நடத்தி வருகின்றனர். நிரந்த சுடுகாடு கேட்டு இப்பகுதி மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வல்லம் கிராமத்தில் கல்வாரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிரந்தர சுடுகாடு வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.