tamilnadu

img

இந்தியாவில் 45 அண்டுகள் இல்லாத அளவுக்கு வேலையின்மை சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலையின்மை சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வேலையின்மை விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த தகவலின்படி, இந்தியாவில் வேலை இல்லாமல் கிராம பகுதிகளில் 5.3 சதவீதமாகவும், நகர் பகுதிகளில் 7.8 சதவீதமாகவும்  உள்ளனர். 

இந்தியா முழுவதிலும் வேலையின்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 6.2 சதவீதமும், பெண்கள் 5.7 சதவீதமும் உள்ளனர். வேலை இல்லாத ஆண்கள், நகர பகுதிகளில் அதிகபட்சமாக 7.1 சதவீதமும், கிராமப் பகுதிகளில் 5.8 சதவீதமும் இருக்கிறார்கள். அதே போல், வேலை இல்லாத பெண்கள் நகர பகுதிகளில் அதிகபட்சமாக 10.8 சதவீதமும், கிராம பகுதிகளில் 3.8 சதவீதம் இருக்கின்றார்கள். இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை சதவீதம் அதிகரித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்னரே, எதிர்கட்சிகள் இது குறித்த தகவல்களை கூறியிருந்தனர். ஆனால் வேலைவாய்ப்பின்மை குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதிவியேற்றுள்ள நிலையில், வேலையின்மை குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 40 கோடியாக உள்ளதாகவும், ஆனால் 2018 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40.60 லட்சமாக இருந்ததாகவும் சி.எம்.ஐ.இ (CMIE - Center for Monitoring Indian Economy) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்டவைகளால் 2018-ஆம் ஆண்டில் சுமார் 1.10 கோடி பேர் வேலை இழந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.