குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடி தலைமையிலான பாஜக அரசு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தை திருத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் பல பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதற்கிடையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி பதாகைகள் ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, இந்த சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் உள்ள சாண்ட்டா க்ளாரா பகுதியில், 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் போது, ”இந்தியாவை விட்டு ஆர்.எஸ்.எஸ் வெளியேற வேண்டும்”, ”நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்”, ”குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” போன்ற முழக்கங்களை எழுப்ப தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.