1778 அமெரிக்க விடுதலைப் போரின் ஒரு பகுதியாக, பாண்டிச்சேரி முற்றுகை தொடங்கியது. சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள், அமெரிக்க விடுதலைப் போரின் ஒரு பகுதியாகத்தான்! 1775இல் வடஅமெரிக்காவிலிருந்த இங்கிலாந்தின் 13 குடியேற்றங்கள், இங்கிலாந்திற்கு எதிராக அமெரிக்க விடுதலைப் போரைத் தொடங்கின. ஹட்சன் நதிப் பள்ளத்தாக்கைக் கைப்பற்றுவதற்காக தான் தொடுத்த சரட்டோகா தாக்குதலில் தோல்வியுற்று, 1777 அக்டோபரில் இங்கிலாந்து சரணடைந்தது. இதனையடுத்து, போராடிக்கொண்டிருந்த குடியேற்றங்களுக்கு ஆதரவளிப்பதாக 1778 பிப்ரவரி 6இல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரான்ஸ், அடுத்த மாதத்தில் இங்கிலாந்தின்மீது போர் அறிவிப்புச் செய்தது. உலகம் முழுவதுமிருந்த இந்நாடுகளின் குடியேற்றங்களுக்கும் பரவி, அமெரிக்க விடுதலைப் போரின் முடிவுடன் முடிவுக்குவந்த இப்போர், ஆங்கிலோ- பிரெஞ்ச்சுப் போர் என்றழைக்கப்படுகிறது. போர், இங்கிலாந்தும், பிரான்சும் தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது ஆகிய செய்திகள் இந்தியாவிலிருந்த குடியேற்றங்களுக்குத் தெரியவந்தபோதே, இந்தியாவிலுள்ள பிரெஞ்ச்சுப் பகுதிகளைக் கைப்பற்றுமாறு ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து உத்தரவிட்டுவிட்டது. பிரெஞ்ச் ஆளுகையிலிருந்த பகுதிகளில் பாண்டிச்சேரி மட்டுமே பலம் வாய்ந்ததாக இருந்த நிலையில், மற்றவற்றை எளிதில் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், பாண்டிச்சேரி முற்றுகையை இந்நாளில் தொடங்கினர். பலம் வாய்ந்தது என்றாலும், பாண்டிச்சேரி ஆளுனரிடம் இருந்தது, 700 பிரெஞ்ச் வீரர்களும், 400 இந்திய வீரர்களும் கொண்ட படை மட்டுமே. இச்சிறு படை, சுமார் 20 ஆயிரம் வீரர்களுடன் முற்றுகையிட்ட ஆங்கிலேயப் படையை, ஏறக்குறைய இரண்டு மாதங்கள் சமாளித்தது. இறுதியாக அக்டோபர் 19 அன்று ஆங்கிலேயர்கள் பாண்டிச்சேரியைக் கைப்பற்றினர். 1674இல் பாண்டிச்சேரியில் வணிக மையத்தை உருவாக்கிய பிரெஞ்ச்சுக்காரர்கள், அதனை இழப்பது முதல் தடவையல்ல. 1693இல் டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியைக் கைப்பற்றி, 1697இல் ஏற்பட்ட ரிஜ்ஸ்விக் ஒப்பந்தத்தின்படி மீண்டும் பிரெஞ்ச்சுக்காரர்களிடம் திருப்பியளித்தனர். 1742இல் ஆங்கிலோ- பிரெஞ்ச்சுப் போராகத் தொடங்கி, 1756-63இல் உலகளாவிய போராகிய ஏழாண்டுப் போரின்போது, 1761இல் பாண்டிச்சேரியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி, 1763இல் ஏற்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தின்படி திருப்பியளித்தனர். இம்முறை 1778இல் இங்கிலாந்து கைப்பற்றி, அமெரிக்க விடுதலைப்போரை முடிவுக்குக்கொண்டுவந்த 1783இன் பாரீஸ் அமைதி ஒப்பந்தத்தின்படி திருப்பியளித்தது. பிரெஞ்ச்சுப் புரட்சியின்போது, 1793இல் மீண்டும் கைப்பற்றிய இங்கிலாந்து, 1814இல் திருப்பியளித்ததைத் தொடர்ந்து, 1954 வரை பிரெஞ்ச்சுக் கட்டுப்பாட்டிலிருந்தது பாண்டிச்சேரி!