tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

அஞ்சலகத்தில் விரைவில் சிப் பொருத்திய ஏடிஎம் அட்டை
வேலூர், ஆக. 1- அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கியவர்களுக்கு சிப் பொருந்திய ஏடிஎம் அட்டை வழங்கப்பட உள்ளதாக அஞ்சல் துறை அதிகாரி தெரிவித்தார்.  இதுகுறித்து கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் எஸ்.சுப்பாராவ் கூறியதாவது: அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஏடிஎம் கார்டுகள் மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிக்காக சிப் பொருத்திய புதிய ஏடிஎம் கார்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்தவுடன் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது 52 அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 34,900 வாடிக்கையாளர்களுக்கு சிப் பொருத்திய ஏடிஎம் அட்டைகள் அந்தந்த அஞ்சலகங்களிலேயே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.

ஆசிய ஸ்கேட்டிங் ஆம்பூர் மாணவர்கள் சாதனை
வேலூர், ஆக. 1- ஆம்பூர் தக்ஷிலா குளோபல் பள்ளி மாணவர்கள் ஆசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆம்பூர் தக்ஷிலா குளோபல் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில் மாணவி வர்ஷிதா ஆயிரம், 500 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, உலக அளவில் இந்தோனேஷியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாணவர் விக்ரம் தங்கப் பதக்கமும், மாணவி நீரல் வெள்ளிப் பதக்கமும், மாணவர் அர்மன் சாலிக் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். பதக்கம் வென்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் லிக்மிசந்த் சிங்வி, செயலாளர் ஆனந்த் சிங்வி, இயக்குநர் பிரியங்கா சிங்வி, முதல்வர் லட்சுமி, நிர்வாக அலுவலர் பத்மநாபன் ஆகியோர் பாராட்டினர்.