tamilnadu

வேலூர், திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

ரூ. 10 கோடி மதிப்பிலான தோல் பொருட்கள் வாங்கி மோசடி
வேலூர், ஆக.18-வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் 6 பேரிடம் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 2பேர் கைது செய்யப்பட்டனர். நூருல்லாப்பேட்டை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் அஸ்வாக், காஷிர், ரபிக், யாசிர் மற்றும் அஸ்வாக்கின் மனைவி ஷாயிகா ஆகியோர் ஒன்றிணைந்து ராணிப்பேட்டையில் இயங்கிவரும் தனியார் தோல் ஏற்றுமதித் தொழிற்சாலை யின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழில் செய்துவரும் வியாபாரிகளிடம் கே எஸ் நிறுவனத்தின் பெயரை கூறி 10 கோடி ரூபாய் வரை தோல் பொருட்களை வாங்கிக்கொண்டு பின்னர் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். ராணிப்பேட்டையில் இயங்கி வரும் கே எஸ் நிறுவனத் தலைமை அலுவலகத்தில் விசாரித்தபோது தங்களுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம்பூர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாவட்ட குற்றவியல் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் அஸ்வக் மற்றும் அவனது மனைவி ஷாயிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலையில் வாரச்சந்தை 
திருவண்ணாமலை,ஆக.18-திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக புதிய முயற்சியாக திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சந்தைமேடு மைதானத்தில் பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறவுள்ளது. இதற்கான துவக்க விழாஆக.25 அன்று காலை மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி வைக்கிறார். இதில் காய்கறிகள், பழங்கள், உணவுப் பண்டங்கள், தானிய வகைகள், மளிகை பொருட்கள் முதல் ஆடு, மாடு வரை நேரடியாக விவசாயிகள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், சிறு சாலையோர வியாபாரிகள் உற்பத்தியாளர்கள் மூலம் நேரடியாக குறைந்த விலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சந்தையில் பங்கேற்க விரும்புகிறவர்கள் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இச்சந்தை வாய்ப்பினை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறது. இச்சந்தைக்கான முன்னேற்பாடுகளை திருவண்ணாமலை நகராட்சி, திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து ஒருங்கிணைப்பு செய்யப்படும். இச்சந்தையானது பிரதி வாரம் ஞாயிறுதோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இச்சந்தையில் பல்வேறு அரசுத்துறையின் மூலம் நடத்தப்படும் விற்பனை அங்காடிகளும் பங்கேற்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.