tamilnadu

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு விதிமுறை மீறலே காரணம்.... நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்

விருதுநகர்:
பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதும் தொழிலாளர்கள் உயிர்பலியாவதற்கும் ஆலை நிர்வாகத்தினர் தொடர்ந்து விதிமுறைகளை மீறுவதும், அதைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பதும்  தான் என சிஐடியு தெரிவித்துள்ளது. 

 சிஐடியு-விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன்,  பொதுச் செயலாளர் எம்.மகாலட்சுமி ஆகியோர் திங்களன்று வெளியிட்டுள்ள  அறிக்கை:-மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட ராஜலட்சுமி பட்டாசு ஆலையில் கடந்த அக்.23-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில்  ஐந்து பெண்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மூன்று பேர் தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் அக். 24- ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

பட்டாசு ஆலையின் கடுமையான  விதிமீறல்களே ஏழு பேர் உயிரிழப்புக்குக்  காரணம். இந்த   ஆலையின் உரிமையாளரான சண்முகராஜன்  ஆலையை நடத்தாமல்,  ஆமத்தூரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கு  ஒப்பந்தம்  விட்டுள்ளார்.  இது வெடிபொருள் சட்டவிதிகளுக்கு விரோதமானதாகும்.  கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம்,  வெம்பக்கோட்டை சிப்பிப்பாறை அருகே கணேசன் என்பவருக்குச் சொந்தமான ராஜம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இங்கும்முழுக்க முழுக்க விதிமீறல் இருந்தது. அரசுஅதிகாரிகள்   பட்டாசு ஆலைகளை ஆய்வுசெய்யாமல், கையூட்டுப் பெற்றுக் கொணடுதொடர்ந்து  செயல்பட அனுமதித்து வருகின்றனர்.  ஆலையை   சட்டவிரோதமாக இயக்க  உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது   தமிழக அரசு கடும்  நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

 பட்டாசு ஆலைகளை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மாதம் தோறும்  ஆய்வு செய்ய வேண்டும்.  ஆலைகளை ஆய்வு செய்ய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை,  தீயணைப்பு மற்றும் மீட்புதுறை,  தொழிலக பாதுகாப்புத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை  தமிழக அரசு நியமிக்க  வேண்டும். இந்த ஆய்வு குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும்.ராஜலட்சுமி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின்  குடும்பங்களுக்கு  தமிழக அரசு நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.  கொடுங்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளிக்கு உயர் சிகிச்சை மற்றும்  நிவாரணம்  வழங்க வேண்டும். மறுவாழ்வுக்கான உதவிகளையும் செய்ய வேண்டும்.