சாஹேல் நாடுகளின் அமைச்சர்கள் இரண்டு நாள் பயணம்
ரஷ்யா உடனான உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை
மாலி, புர்கினா பாசோ, நைஜர் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைக்காக ஏப்ரல் 3, 4 ஆகிய இருநாட்கள் ரஷ்யா சென்றுள்ளனர். இந்த பயணத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தங்கள் நாட்டில் பொம்மை ஆட்சி நடத்தி வந்த பிரான்சுக்கு எதிராக மாலி, புர்கினா பாசோ, நைஜர் ஆகிய நாடுகளில் 2020 முதல் 2023 வரை மக்கள் ஆதரவுடன் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தனது பொம்மை ஆட்சி மூலமாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் அமைத்திருந்த தங்களின் ராணுவத்தளங்கள் மூலமாகவும் அந்நாடுகளின் இயற்கை வளங்களை பிரான்ஸ் பல ஆண்டுகளாகச் சுரண்டியுள்ளது. இந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளும் ராணுவ ஆட்சி அமைத்த பிறகு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார கூட்டமைப்பு என்ற அமைப்பில் இருந்து வெளியேறி 2024 இல் சஹேல் நாடுகளின் கூட்டமைப்பை (AES) உருவாக்கி ரஷ்யாவுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளையும் கடைப்பிடித்து வருகின்றன. எனவே, இந்த ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிதி உதவியுடன் இயங்கி வருகின்ற பல பயங்கரவாதிகள் குழுக்கள் மிக மோசமான தாக்குதல்களை நடத்தி உள்நாட்டு அமைதியை சீர்குலைத்து வருகின்றன. இந்நிலையில் மாலி தலைமையில் இந்த நாடுகளின் அமைச்சர்கள் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பை அதிகரிப்பதுகுறித்து விவாதிக்க உள்ளனர். இந்த நாடுகளின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே வாக்னர் என்ற தனியார் கூலிப்படை (ராணுவம்) மூலம் ரஷ்யா ராணுவ ஆதரவை வழங்கியுள்ளது. அதே போல எரிசக்தி மற்றும் சுரங்கத் துறைகளிலும் ரஷ்யா உடனான ஒத்துழைப்பு நடந்து வருகிறது.