சிதம்பரம் இரவிச்சந்திரன்
காப்15 உச்சிமாநாடு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அரசுகள் அடுத்துவரும் பத்தாண்டுகளுக்கு தங்கள் புதிய இலக்குகளைத் தீர்மானிப்பதில் தீவிரமாக உள்ளன. முன்பை விட உயிர்ப் பன்மயத்தன்மையைக் காப்பதில் இன்று விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றாலும் இயற்கையைக் காக்க ஐநா இலட்சியமிட்ட இலக்குகள் எவையும் இதுவரை எட்டப்படவில்லை.
காப்15 என்றால் என்ன?
மனித நாகரீகம் தொடங்கியதில் இருந்து அவனால் அழிக்கப்படும் உயிரினங்கள், சூழல் மண்டலங்களை பாதுகாக்க உலக நாடுகள் காப் உச்சிமாநாடுகளை நடத்துகின்றன. 1992 ரியோ புவி மாநாடு காலநிலை மாற்றம், பாலைவனப் பரவல் தடுப்பு மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பு ஆகியவற்றிற்காக மாநாடுகள் நடத்தி உடன்படிக்கைகளை ஏற்படுத்துவது என்று முடிவு செய்தது. இதில் உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பு மாநாடுகள் இயற்கை வளப் பாதுகாப்பு, இவற்றின் நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும் இதன் மரபணு வளங்களைப் பாதுகாத்து பகிர்ந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் இடையில் செயல்படுத்தப்படவேண்டிய இலக்குகள் இதில் முடிவு செய்யப்படுகின்றன. கடைசியாக 2010இல் ஜப்பான் நகோயாவில் நடந்த காப்10 மாநாட்டில் உலக நாடுகள் வாழிடப் பாதுகாப்பு, இயற்கைக் காப்புப் பகுதிகளை (natural reserves) 2020ம் ஆண்டிற்குள் 17 விழுக்காடாக அதிகரிப்பது, போன்றவற்றில் இலக்குகளை நிர்ணயித்து செயல்பட ஒப்புக்கொண்டன. ஆனால் இதில் எதுவும் இன்றுவரை எட்டப்படவில்லை.
எப்போது - எங்கு - யார் தலைமையில்?
இம்மாநாடு டிசம்பர் 7 முதல் 19, 2022 வரை கனடா மாண்ட்ரீல் நகரில் உறுப்புநாடுகள் (Conference of Parties COP) பங்கேற்புடன் இருவார காலம் நடக்கிறது. சீனா இதற்கு தலைமையேற்கிறது. சில நாட்களில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் கனடா மாநாட்டிற்கு வருகை தரவுள்ளனர். இறுதி அறிக்கை கத்தார் உலகக் கால்பந்து இறுதிப்போட்டிக்கு முதல் நாள் டிசம்பர் 17 அன்று கையெழுத்திடப்படும் என நம்பப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் இதற்குப் பின்பும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலநிலை மாநாடுகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
காலநிலை உச்சிமாநாடுகளில் இருந்து இம்மாநாடுகள் முற்றிலும் வேறுபட்டவை. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த அளவிற்கு புவி வெப்ப உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்துவது, 1.5 டிகிரி என்ற இலட்சியத்திற்குள் வைத்திருப்பது போன்ற 2015 பாரிஸ் உடன்படிக்கை அம்சங்களை நிறைவேற்றுவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இவை நடைபெறுகின்றன. உயிர்ப் பன்மயத்தன்மைப் பாதுகாப்பு (CBC Conservation On Biodiversity) என்ற செயல்திட்டத்தின் அடிப்படையில் காப்15 வகை மாநாடுகள் நடைபெறுகின்றன. ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ள நிலையில் இம்மாநாடு இயற்கையைக் காப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நடக்கிறது. மாநாட்டின் முடிவில் 2020க்குப் பிந்தைய உலகளாவிய உயிர்ப் பன்மயத்தன்மை செயல்திட்டம் (Global Biodiversity framework) என்ற பெயரில் வெளியிடப்படும் வரைவு அறிக்கையில் ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் கட்டுப்படுத்துதல் முதல் செயற்கை உயிரிப்பொருட்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கலான விதிகள் வரை 20க்கும் மேற்பட்ட இலக்குகளை அடையத் தேவையான திட்டங்கள் எடுத்துரைக்கப்படும். நுண்ணிய பாக்டீரியா முதல் பாலூட்டிகள் வரை பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உயிர்ப் பன்மயத்தன்மையில் அடங்கும். நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், உண்ணும் உணவு உட்பட அனைத்தும் இதை நம்பியே உள்ளது. தாவரங்கள் இல்லாமல் ஆக்சிஜன் இல்லை. மகரந்தச்சேர்க்கை செய்ய தேனீக்கள் இல்லையென்றால் பழங்கள் உட்பட வேளாண் பொருட்கள் எவையும் இல்லை. பிரேசில், கொலம்பியா, இந்தோனேஷியா, சீனா போன்ற நாடுகள் செழுமையுள்ள தாவர பாலூட்டி பூஞ்சை இருவாழ்வி உயிரினங்களின் சொர்க்கபூமிகள். மனித குலம் ஆரோக்கியமான சூழல் மண்டலங்களை நம்பியே வாழ்கிறது. உலகப் பொருளாதாரத்திற்கும் உயிர்ப் பன்மயச் செழுமையே அடித்தளம். 41.7 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உலக உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி பாதியளவு இயற்கை வளங்களையே சார்ந்துள்ளது என்று பன்னாட்டு காப்பீட்டு நிறுவனம் ஸ்விஸ் ரி (Swiss Re) கூறுகிறது.
ஏன் கவலைப்படவேண்டும்?
டைனோசார் வாழ்ந்த காலத்திற்குப் பின் பூமி உயிரினப் பேரழிவை சந்தித்துவருகிறது. இதற்குக் காரணம் மனிதனே. சுரங்கம் தோண்டல், மாசு, வேட்டை, விவசாயம், கட்டுமானம், போக்குவரத்து போன்ற செயல்களால் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளது. விஞ்ஞானிகள் கருத்துப்படி பூமியில் ஆறாம் இனப்பேரழிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. 1970 முதல் 2018 வரை மட்டும் பில்லியன் கணக்கான தனிப்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. இது அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
நிரந்தர அழிவு
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சீர்கேடுகளை சரிசெய்யமுடியும். ஆனால் இன அழிவுகள் நிரந்தரமானவை. இது புவியின் நீடித்த நிலையான ஆரோக்கியத்திற்கு மீளா இழப்பு. அதனால் மனிதர்கள் இந்தக் கோளில் வாழ உயிரினங்களின் நலமான வாழ்வு இன்றியமையாதது. 90 விழுக்காடு உணவு நமக்கு மண்ணில் இருந்தே கிடைக்கிறது. என்றாலும் 40 விழுக்காடு நிலப்பரப்பு மனிதனின் மிதமிஞ்சிய சுரண்டலால் வளமிழந்துள்ளது. சூழல் நலத்தைக் காட்டும் மோனார்க் பட்டாம்பூச்சிகள் போன்ற பல உயிரினங்கள் அழியும்நிலையில் உள்ளன. பூச்சிகள் பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 5000க்கும் மேற்பட்ட தரை வாழ் விலங்குகள் அழியும்நிலையில் உள்ளன. வரும் 20 ஆண்டுகளில் இவை அழிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. ஊர்வனவற்றில் ஐந்தில் ஒன்று அழிந்து வருகின்றது. எட்டில் ஒரு பறவையினம் அச்சுறுத்தலிற்கு ஆளாகியுள்ளது. 40 விழுக்காடு தாவர வகைகள் ஆபத்தில் உள்ளன. கவலை தரும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனாவின் தலைமையில் மாண்ட்ரீலில் கூடவிருக்கும் காப்15 உச்சிமாநாடு இயற்கையைக் காக்க அதன் மூலம் மனிதகுலத்தைக் காக்க நல்ல செய்தியை கொண்டுவரும் என்று நம்புவோம்.