tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

சேர்வலாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது

திருநெல்வேலி, அக். 21- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை புறகர் பகுதிகளான ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. நாங்குநேரியில் 36 மில்லி மீட்டரும், அதிகபட்சமாக ராதாபுரத்தில் சேரன்மகாதேவியில் 17 மில்லிமீட்டரும்  மழை பெய்துள்ளது. களக்காடு, தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் தொடர்ந்து அதிகமாக  நீர்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க  அனுமதிக்கப்பட வில்லை. இதனால் தீபாவளியை யொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் அருவியை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அணைகளை பொறுத்த வரை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து  வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 93.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.38 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 96 அடியாகவும் உள்ளது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் நிலையில் அந்த அணை நிரம்பிவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த அணை பகுதியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 12  மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாநகர பகுதியில் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை தொடர் மழை பெய்தது. ஏற்கனவே தொடர்மழையால் மாநகரின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சகதிக்காடாக  காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:  8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

திருநெல்வேலி, அக்.21- நெல்லை மாவட்டத்தில் உவரி, இடிந்தகரை, பெருமணல், கூட்டபுளி, கூடுதாழை, கூட்டப்பனை, பஞ்சல், தோமையார்புரம், கூத்தன்குழி உட்பட 10 கடற்கரை மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை அடுத்து நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என  ராதாபுரம் மீன். வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு  திங்கட்கிழமை மாலை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் 8  ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செவ்வாயன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.