1950 பிப்ரவரி 11... இந்திய துணைக்கண்டம் தன்னை குடியரசு நாடாக பிரகனடப்படுத்தி கொண்ட 16வதுநாள். நாடெங்கும் சுதந்திரக்காற்று வீசிக் கொண்டிருந்தாலும், அது இந்திய கம்யூ னிஸ்ட்களுக்கு சுவாசிக்கக் கிடைக்க வில்லை. 1948-1951 காலகட்டம் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்தியா விடுதலை பெற வெள்ளை ஏகாதி பத்தியத்தை விரட்டியடித்த மகத்தான பெருமை இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு. ஆனால் அவர்கள் விடுதலைக்காற்றைச் சுவாசிக்க, குடியரசு தின கோலாகல விழாவை கொண்டாட முடியாமல் நாடெங்கும் பல்வேறு சிறைக்கொட்டடிகளில் அடைத்து வைத்து, அகம் மகிழ்ந்தது அன்றைய காங்கிரஸ் அரசு.
கொடிய சிறை
ஏன்? எதற்காக? கம்யூனிஸ்ட்டுகள் செய்த குற்றம்தான் என்ன? “ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர், உதையப்ப ரெல்லாம் மாறி, ஒப்பப்பராகிவிடுவர் உணரப்பா நீ” என்ற பாரதி தாசனின் கனவை நனவாக்க “ஒப்பப்பர் கொள்கை களை” விடுதலை மண்ணில் விதைத்ததுதான். இது, அன்றைய ஆளும் நிலப்பிரபுத்துவ- முத லாளித்துவ வர்க்கத்தின் தூக்கத்தைக் கெடுத்தது. அத னால்தான் தன் வர்க்கப் பாசத்தை நிலைநாட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்து, கம்யூனிஸ்ட்டுகளை சிறையில் அடைத்தது. அதுவும், கொடும் அடக்குமுறை ஏவும் சிறைகளையே தேடித்தேடி அடைத்தது. அத்தகைய கொடும்சிறைகளில் ஒன்றுதான் சேலம் சிறைச்சாலை. அன்று சென்னை ராஜதானி. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. தமிழர், மலையாளி, தெலுங்கர் என 350க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் சேலம் மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. பெரும்பகுதியினர் 20 வயதுக்கு உள்பட்ட அரசியல் கைதிகள் ஆவர்.
‘‘நாங்கள் சுதந்திரப் போராளிகள்’’
“நாங்கள் சுதந்திரப் போராளிகள்; எங்களை கொலை, கொள்ளை, திருட்டுக் கைதிகளோடு அடைப்பதோ, அவர்களைப் போல் நடத்துவதோ கூடாது; அதை எங்கள் உயிர் போனாலும் அனுமதியோம்” என கம்யூனிஸ்ட்டுகள் நாடெங்குமுள்ள சிறைச்சாலைகளில் வீரச்ச மர் புரிந்தார்கள். அது, சேலம் சிறையிலும் நடந்தது. சுதந்திரப்போராட்ட பாரம்பரியமிக்க தியாகிகளான கம்யூனிஸ்ட்டுகளுக்கு “அரசியல் கைதிகள்” என்கின்ற உரிமையைக்கூட வழங்கிடாத அரசாக இருந்தது அன்றைய காங்கிரஸ் அரசு. “எங்களை அரசியல் கைதி களாக நடத்து” என்று சிறையினுள் போராடியதுதான் கம்யூனிஸ்ட்டுகள் செய்த மாபெரும் குற்றம். அதற்காக காக்கைக் குருவிகளைச் சுடுவது போல், நிராயுதபாணிகளாக இருந்த கம்யூனிஸ்ட்டு கள் மீது துப்பாக்கிக் குண்டுமழை பொழியப்பட்டது. இது சுதந்திர இந்தியாவின் “ஜாலியன் வாலாபாக் படுகொலை’’ என்றே வரலாற்று ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள். சேலம் சிறையில் அன்று நடந்ததை மறைந்த தியாகி உத்தமலிங்கம் கூறுகிறார்... “கிரிமினல் கைதிகள்போல் தொப்பி, நெம்பர் பேட்ஜ் அணிய வற்புறுத்தினர். இந்த வற்புறுத்துதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. பிப்ரவரி 7ஆம்தேதி 15 தோழர்களை ‘அனெக்ஸ்’ பகுதியில் இருந்து பிரதான சிறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கு மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இறைக்க வைத்தனர். இதை கேள்விப்பட்ட எங்களுக்கு ரத்தம் கொதித்தது. பிப்ரவரி 11ஆம்தேதி நெம்பர் பேட்ஜ் அணிய மறுத்ததால், ஜெயிலர் கிருஷ்ணநாயர் கொக்கரித்தான். முதலில் தடியடி நடத்தினான். அதை எதிர்கொள்ள சேகரித்து வைத்திருந்த கற்களை நாங்களும் வீசினோம். கிருஷ்ணநாயர் மீது ஒருகல் விழுந்துவிட்டது. உடனே துப்பாக்கியால் சரமாரியாக கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துவிட்டனர் நரவேட்டை சிறைக்காவல் துறை யினர். அப்பொழுது எங்களைப் போன்ற இளைஞர் களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எமனாய் சீறிப் பாய்ந்து வந்த அந்த துப்பாக்கிக் குண்டுகளை மூத்ததோழர்கள் தங்களது நெஞ்சில் ஏந்திக்கொண்டனர் எங்களை காக்கும் கவசமாக! 105 ரவுண்டு சுட்டு, தங்களது ரத்தப்பசியைத் தீர்த்துக்கொண்டனர். காவல்துறையினர்.”
22 கம்யூனிஸ்ட்டுகள்
17 கம்யூனிஸ்ட்கள் துப்பாக்கிக்குண்டுகளுக்கு இரை யாகினர். 5 கம்யூனிஸ்ட்கள் அடித்தே கொல்லப்பட்டனர். அந்த நாள்தான் 1950 பிப்ரவரி 11. குற்றுயிரும் குறையுயிருமாக கிடந்த கம்யூனிஸ்ட்டுகளின் கை, கால், உடல் எல்லாம் ரத்தக்காயங்களுடன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்தப் பாதையில் மட்டுமல்ல, சேலம் நகரமே அன்று கம்யூனிஸ்ட்களின் செங்குருதியால் நனைந்தது. ரத்தவெறி அடங்காமல், உயிர்போன உடல்களைக்கூட உறவினர்களிடம் சிறை நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அந்த வீரத்தியாகிகளின் திருப்பெயர்கள் வருமாறு: 1. ஆறுமுகம் (சேலம்), 2.காவேரி முதலியார் (திருச்செங்கோடு), 3.ஷேக் தாவூத் (வேலூர்), 4.எம்கே.கோபாலன் நாயர், 5. பி.கோபால் நாயர், 6.நீலஞ்சேரி நாராயணன் நாயர், 7.பரம்பிக்கடாரம் குஞ்சிப்பா, 8.குஞ்சிராமன், 9.நந்தாரி குஞ்ஞம்பு, 10.கலாத்தொக்கோயில் ஏதேன், 11.மரோலிகோரன், 12.எம்.நாராயண நம்பியார், 13.புல்லாக்ஜி ஏதேன் கோவிந்தநம்பியார், 14.குஞ்சப்ப நம்பி யார், 15.வடகோறையின் மான் ஆசாரி, 16.என்.கண்ணன், 17.காட்டூர் நடுவலப்பிறையில் கோரன், 18.உடை யாமாடத்து பலக்கல் நம்பியார், 19.தாளன் ராமன் நம்பியார், 20.எம்.கோபாலக்குட்டிநாயர், 21.நடுக்காண்டி பத்மநாபன், 22.நலப்பறக்கல் பாலன் ஆகியோரில் 3 தோழர்கள் தமிழ்நாடு. மற்ற 19 தோழர்கள் கேரளம். இந்த 22 வீரத்தியாகிகள் யாவரும் உழைப்பாளி மக்களே. சுதந்திர இந்தியாவில் ஆளும்வர்க்கத்தின், அதன் அடக்குமுறை கருவியான அரசுகளின் கொள்கைகளை எதிர்த்து, அஞ்சாமல், கண் துஞ்சாமல், சமத்துவ சமுதாயத்திற்காகவும், பெற்ற சுதந்திரத்தைப் பேணி பாதுகாத்திடவும் கம்யூனிஸ்ட்டுகள் அன்று முதல் இன்று வரை அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, சமரசமின்றி சமர்புரிந்து வருகிறார்கள், சேலம் தியாகிகளின் பாதையில்!
இன்று (பிப்.11) சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தினம்