அலங்காநல்லூர், ஜூன் 26- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நடைபயணம் மேற் கொள்ளக்கூடாது என காவல்துறை கெடுபிடி செய்தது. கெடுபிடியையும் மீறி நடைபயணம் செய்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அலங்காநல்லூர் தேசியக் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலி யுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் பல்வேறு இயக்கங்கள் மூலமும், கோரிக்கை மனுக்கள் மூலம் அரசை வலியுறுத்தி வருகின்றன. அலங்காநல்லூர் ஆலையை இயக்க வலியுறுத்தி கடந்தாண்டு 46 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதற் கிணங்க போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர், ஆலை யை இயக்குவது குறித்து ஆட்சியர் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய வேளாண் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் கரும்பை அதிகம் பயிரிடுங்கள், 99.9 சதவீதம் ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்தக் கூட்டத்தில் பத்திரப் பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி, சர்க்கரை துறை ஆணையாளர் உள்ளிட்ட உயரதி காரிகளும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த கே.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஆலையை இயக்கு வது குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆய்வுக் குழுவும் ஆலைக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து, ஆலையை இயக்க மொத்தம் ரூ.26 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதியில் ஒவ்வொரு வருட அரவைப் பருவத்தில் 34 ஆயிரம் ஏக்கரில் கரும்பு விளை கிறது. 1.40 லட்சம் டன் கரும்பு அரவைக்கு வரும். இதன் மூலம் ரூ.150 கோடி அளவிற்கு பணப்புழக்கம் நடை பெறும். இந்தப் பின்னணியில் 2023-2024-ஆம் ஆண்டு அரவையைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச்சாமி, ஸ்டாலின் குமார், ராம ராஜ், மாவட்டச் செயலாளர் கரு.கதி ரேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ்.பி. இளங்கோவன், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமா மகேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் எஸ்.ஆண்டிச்சாமி மற்றும் 150-க்கு மேற்பட்ட கரும்பு விவசாயிகள் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையி லிருந்து மதுரை ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட னர்.
நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன் துவக்கி வைத்தார். அச்சம்பட்டி அருகே விவசாயிகளின் நடைபய ணத்திற்கு அனுமதியில்லை எனக் கூறி காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் பாலசந்துரு தலைமையிலான காவல்துறையினர் தடுத்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அலங்காநல்லூர் காவல்துறை துணை ஆய்வாளர் அண்ணாத்துரை போராட்டத்தில் ஈடு பட்ட மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச்சாமி உள்ளிட்டவர்களை தடுப்பதாகக் கூறி அராஜகமான முறை யில் நடந்து கொண்டார். அவரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப் பட்டன. பின்னர் விவசாயிகள் வாக னங்கள் மூலம் ஆட்சியர் அலுவலகம் செல்ல அனுமதித்தார். இதையடுத்து வாகனங்களில் புறப்பட்டு வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.