tamilnadu

img

புறவாசலில் நுழையத் துடிக்கிறது பாஜக: வாடிவாசலைப் போல நேரடியாக எதிர்கொள்வோம்

புதுக்கோட்டை, ஜூன் 19-  தமிழ்நாட்டில் பாஜக அவர்களின் பாணியில் புறவாசல் வழியாக நுழையத் துடிக்கிறது. நாம் நமது பாரம்பரியப்படி ஜல்லிக்கட்டில் வாடிவாசலைப்போல நேரடி யாக எதிர்கொள்வோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘2016-இல் அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது, முதலில் 5 பேருடன் தொடங்கிய போராட்டம், மெரி னாவே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மாறியது.

இது உலகம் முழுவதும் எதிரொலித்தது. எந்தப் போராட்டத்தையும் அதிமுக அரசு சரியாக கையாளவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றார்கள். ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தையும் தடுத்தார்கள். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல்  தமிழ்நாட்டில் பாஜக நுழைய முயற்சிக் கிறது. பாஜகவின் கிளையாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இங்கே ஒருவர் தன்னுடைய வேலையைத் தவிர மற்ற  எல்லாவற்றையும் செய்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொடுக்கும் கோப்புகளில் கையெழுத்திட வேண்டியது தான் அவரது வேலை.  உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதனக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கிறார். குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறார். இந்தியாவில் இந்தியும், செத்துப்போன சமஸ்கிருதமும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறார். மாநிலங்களுக்கு என்று தனி கலாச்சாரம் தேவையில்லை என்கிறார். சித்தாந்த ரீதியாக அவர்களை எதிர்ப்பதால் அடக்கு முறையை ஏவிவிடப்பார்க்கிறார்கள். பாசிஸ்டுகள் தமிழ்நாட்டை ஆளத் துடிக் கின்றனர். நேரடியாக அவர்களால் எதையும் செய்ய முடியாமல் புறவாசல் வழியாக நுழையப் பார்க்கின்றனர். நாம் நமது பாரம்பரியப்படி, வாடிவாசல் வழியாக காளையை அடக்குவதைப் போல, தேச விரோதி களான அவர்களை நேரடியாகச்சந்திப்போம். எத்தனை மோடிக்கள், அமித்ஷாக்கள், நட்டாக்கள் வந்தாலும், தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவின் தொண்டர்படையாக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

ஒன்றிய பாஜக ஆட்சியமைந்த பிறகு, அமலாக்கத்துறையினர் 121 வழக்கு களைத் தொடுத்தார்கள். அவர்களில் 115 பேர் எதிர்க்கட்சியினர். தமிழ்நாட்டில் செந்தில்பாலாஜியிடம் 18 மணி நேரம் உணவு, தண்ணீர் கூடக் கொடுக்காமல் கழிப்பறைக்குக்கூட செல்லவிடாமல் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். குறுகிய காலத்தில் உலகின் பெரும் முதலாளிகளின் பட்டியலில் இரண்டாம் இடம் அதானிக்கு கிடைத்தது எப்படி எனக் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்தா ர்கள். நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் ஈடிக்கும் பயப்பட மாட்டோம். 21 கோப்புகளில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார் ஆளுநர். அதில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குகள் மீதான நடவடிக்கைகள். அதிமுகவும் பாஜகவும் பின்னிப் பிணைந்துள்ளார்கள். இங்குள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், வேலுமணியின் மீதும் வருமான  வரித்துறையினர் சோதனை நடத்தினார் களே, என்ன நடந்தது?. அதிமுக ஆட்சிக்காலத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்முறையாக அம லாக்கத்துறையினர் சோதனை மேற்கொண் டனர். அப்போதும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின்தான் கண்டனம் தெரிவித்தார். 

அப்போது அதிமுக அமைச்சர்கள் வாயைத் திறக்கவில்லை. கடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் அடிமைகளை விரட்டி யடித்தோம். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அந்த அடிமைகளின் எஜமானர்களையும் விரட்டியடிப்போம்.  கீழடியில் தொடர் அகழாய்வுக்கு உத்தர விட்டதோடு அங்கு அருங்காட்சியகத்தை யும் அமைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அண்ணா நூற்றாண்டு விழாவின்போது நினைவு நூலகம் அமைத்தார். கருணாநிதி நூற்றாண்டு விழாவின்போது உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கினார். ஆனால், எம்ஜிஆர் நூற்றாண்டு வந்தபோது, அதிமுகவினர் கடற்கரைச் சாலையில் வளைவு ஒன்றை அமைத்தார்கள். மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான பிரம்மாண்டமான ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்ட த்தில் மினி ஸ்டேடியத்துடன் வாடிவாசல்கள் அமைக்க வேண்டுமென அமைச்சர்கள் கோரியிருக்கிறார்கள். முதல்வரின் கவ னத்துக்கு கொண்டு சென்று அவற்றையும் அமைத்துத் தருவோம்’’ என்றார்.  கூட்டத்திற்கு, ஜல்லிக்கட்டுப் பேரவை யின் தலைவர் பி.ராஜசேகரன் தலைமை வகித்தார். விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரிய கருப்பன், பி.மூர்த்தி, சா.சி.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, திருச்சி மேயர் மு.அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டுப் பேரவையின் இளை ஞரணிச் செயலர் ராஜேஷ் வரவேற்றார். திமுக வடக்கு மாவட்டச் செயலர் கே.கே.செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.