tamilnadu

img

அலங்கார மலர்களைக் காக்க உதவும் மண் பூஞ்சைகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

அலங்காரத் தாவரங்கள் அழிவதற்கு முன் காப்பாற்றும் நோக்கத்துடன் ஆரோக்கியமாக அவை உயிர் வாழ உதவும் மண் பூஞ்சைகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். காலத்திற்கு எதிரான ஒரு ஓட்டப்பந்தயம் என்று அவர்கள் இதை குறிப்பிடுகின்றனர். இவை அழியும் நிலையில் உள்ள வாழிடங்களுக்கு பூஞ்சைகள் மறுபெயர்வு செய்யப்பட்டு அங்குள்ள மண்ணுடன் கலந்து அவற்றை பாதுகாப்பது இம்முயற்சியின் நோக்கம். அரிய, பாரம்பரிய, அசாதாரணமான பாசி போன்ற பல தாவரங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. 

தாவரங்களை வாழவைக்கும் பூஞ்சைகள் இந்த கண்காட்சியில் உலகின் பல பகுதிகளில் இருந்து அரிய, அழியும் ஆபத்தில் இருக்கும் பல அலங்காரத் தாவரங்கள் யுகே மற்றும் யுஎஸ் அலங்கார பூங்கா விஞ்ஞானிகளால் தனி ஒரு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டன. யுகே புல்வெளிப் பிரதேசங்களில் வளரும் சிறிய, நறுமணம் கமழும் மலர்கள் முதல் இந்தியா மற்றும் வட அமெரிக்காவின் பிரகாசமான வண்ண மலர் தாவரங்கள் வரை இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. “மண்ணில் நிகழும் காலநிலை மாற்றத்தின் அவசரநிலையை முதலில் உணர்த்துவது மறையும் அலங்கார தாவரங்களே. இத்தாவரங்கள் உணர்திறன் மிகுந்தவை. நுண் உயிரி வளங்கள், மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் காரணிகள் சுற்றிலும் ஏராளமாக இருந்தாலும் இவை வளர குறிப்பிட்ட சூழலும் காரணிகளும் மட்டுமில்லாமல் சில குறிப்பிட்ட பூஞ்சைகளும் தேவை. இதை மண்ணிற்கடியில் இருக்கும் அவற்றின் வாழிடத்தை ஆராய்ந்து கண்டறியவேண்டும். இந்த தாவரங்களின் விதை பரவலுக்கு உதவும் மகரந்தசேர்க்கையாளர்கள் அடையாளம் காணப்படவேண்டும். ஒரு தாவரம் வளர அவற்றின் வாழிடத்தில் இருக்கும் மண்ணின் கீழ்ப்பகுதியிலும் மேற்பகுதியிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை சூழலின் தரத்தை அடையாளம் காட்டுபவை” என்று யு எஸ் ஸ்மித்சோனியன் சூழல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி மெலிஸா மெக்காமிக் (Melissa McCormick) கூறுகிறார்.

இத்தாவரங்களில் 50% உலகின் சில பகுதிகளில் அழிந்துவிட்டன. இவையே காலநிலை மாற்றத்தால் மிக ஆபத்தான நிலையில் உள்ள தாவரங்கள் என்று சமீபத்திய க்யூ (Kew) பூங்கா ஆய்வு கூறுகிறது. இவற்றை பாதுகாக்க உடனடியாக செயல்படாவிட்டால் இவை முற்றிலும் அழிந்துபோய்விடும். பூஞ்சைகள் தவிர இந்த தாவரங்கள் வளர உதவும் பிற உயிரினங்கள் பற்றியும் ஆராயப்படுகிறது. ஸ்மித்சோனியன் மையத்தில் இதற்காக வாழும் பூஞ்சைகளின் சேகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே இனமாக இருந்தாலும் ஒவ்வொரு அலங்காரத் தாவர வகையும் வெவ்வேறு மண் உயிரியல் அடிப்படையில் வளர்கிறது. இதனால் இந்த ஆய்வு சவால்கள் நிறைந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் பூமியின் வட கோளப்பகுதியில் காணப்படும் ஒரு அலங்காரத் தாவரம் தென் கோளப் பகுதியில் வளரும் தாவரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. வளர்ச்சிக்கு உதவும் மண் பூஞ்சைகளை தென் பகுதியில் இருந்து வட பகுதிக்கு மாற்றி இவை அழியாமல் பாதுகாக்கமுடியுமா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெறுகின்றன. சூழல் பாதுகாப்பில் அலங்காரத் தாவரங்களின் முக்கியத்துவம்

இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் இந்த தாவரங்கள் பூங்காக்களில் மட்டும் இல்லாமல் வனப்பகுதிகளிலும் வளரும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். “தோட்டக்கலை பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் அலங்காரத் தாவரங்கள் மற்றும் இதர அரிய தாவரங்களை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுகின்றனர். அலங்காரத் தாவரங்களே பூமியில் காணப்படும் மிகப்பெரிய பூக்கும் மலர்களின் குடும்பம். இவற்றில் பாதி இனங்களும் பாதுகாக்கப்படவேண்டிய நிலையில் உள்ளவை. அதனால் இவை எங்கு காணப்பட்டாலும் அவை அரிதானவையாகவே உள்ளன. தோட்டக்கலை சூழல் மற்றும் வாழிடப் பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் இந்த தாவரங்களை எவ்வாறு சரியாக வளர்க்க வேண்டும் என்பதை அறிந்து வளர்த்தால் அது சூழல் பாதுகாப்பிலும் பெரும் பங்கு வகிக்கும். தோட்டங்களில் செடி வளர்ப்பவர்கள் அலங்காரத் தாவரங்களின் முக்கியத்துவம் கருதி அவற்றை வளர்க்கவேண்டும். மக்கள் வாழும் இடங்களுக்கு அருகில் வளரும் இத்தகைய தாவரங்களை அடையாளம் காணவேண்டும். இந்த வகை தாவரங்களின் உலகளவிலான மரபணுக் களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று பென்சில்வேனியா லாங்வுட் தோட்டத்தின் அலங்காரத் தாவரப் பிரிவு ஆய்வுக்குழுத் தலைவர் பீட்டர் சேல் (Peter Zale) கூறுகிறார். “நர்சரிகளில் வளர்த்து விற்கப்படுவதை மட்டுமே அலங்காரத் தாவரங்கள் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் இயற்கையில் வளரும் இத்தகைய தாவரங்களை அடையாளம் கண்டுகொண்டால் மக்கள் அவற்றையும் பாதுகாக்க முயல்வார்கள். இவை வளர்ந்துள்ள இடங்களில் இருக்கும் மண்ணை அழிக்காமல், சேதப்படுத்தாமல், அவற்றின் இயல்பான வாழிடத்திலேயே அவை நன்கு வளர நாம் உதவவேண்டும்” என்று சிகாக்கோ தாவரவியல் பூங்காவின் மலர் பிரிவு ஆய்வாளர் ஜொஹான்னா ஹச்சின்ஸ் (Johanna Hutchins) கூறுகிறார். இந்த முயற்சிகள் வெற்றிபெறும்போது அழிந்து கொண்டிருக்கும் அலங்காரத் தாவரங்கள் ஆபத்தான நிலையில் இருந்து பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.