tamilnadu

img

பணிக்குத் திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்

சென்னை,அக்.17- உரிமைகள் கோரி ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, வியாழக்கிழமை(அக்.17) மீண்டும் பணிக்குத் திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1,500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  36 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன்,டி.ஆா்.பி. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன்,மு.முத்துக்குமார் ஆகியோருடன், சாம்சங் பணியாளர்களும் பங்கேற்றனா்.இதைத் தொடா்ந்து, சாம்சங் தொழிலாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு அக்டோபர் 17 முதல் வேலைக்குச் செல்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பணிக்கு திரும்புமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் நிர்வாகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதன் பேரில், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்தில் ஒன்று கூடி, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு (அக்.17) மீண்டும் பணிக்குத் திரும்பினர். வழக்கமான சோதனைகளுக்கு பின்பு தொழிற்சாலைகளுக்கு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியது அனைத்து தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.