tamilnadu

எம்.பி.க்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத ரயில்வே நிர்வாகம்

எம்.பி.க்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத ரயில்வே நிர்வாகம்

ராபர்ட் புரூஸ் எம்.பி. கண்டனம்

திருநெல்வேலி, மே 21- நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு நெல்லை நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள நெல்லை-நாகர்கோவில் மற்றும் நெல்லை - தென்காசி ஆகிய பிரிவுகளில் இருக்கும் ரயில் நிறுத்தங்கள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளை ஏற்க அவர்கள் மறுத்து விட்டார்கள். கொரோனா தொற்றுக்காலத்தில் இந்த 2 பிரிவுகள் இடையே உள்ள பணகுடி, மேலப்பாளையம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ரயில் நிறுத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலை யில் தொற்று காலம் முடிந்த பின்னரும் அந்தஉத்தரவு திரும்பப் பெறப்படாமல் உள்ளது. அதனை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் மூலம் இது ரயில்வே வாரியத்தால் எடுக்கப்படக்கூடிய முடிவு என பதில் கொடுக்கிறார்கள். யாரை கேட்டு அந்த உத்தரவு அமல்படுத்தப் பட்டது என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. அதுபோல் வள்ளியூர், பணகுடி, நாங்குநேரி உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. பொது மக்கள் நாள்தோறும் வந்து செல்லும் நிலையில் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நெல்லை மாநகர் பாளை குலவணிகர்புரம் பகுதியில் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரயில்வே வாரியத்திற்கு ஒப்புதல் அனுப்பிய நிலையில் இதுவரை ரயில்வே வாரியத்தால் பணிகள் தொடங்குவதற்கான தடை இல்லா சான்று கொடுக்கப்படாமல் காலதாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதனையும் விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் ரயில்வே அதிகாரிகள் அதற்கு செவி மடுக்காமல் இருப்பது தவறானது. இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் பிரதிநிதிகளை ரயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட தென்னக ரயில்வே அதிகாரிகள் தூண்ட வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.