tamilnadu

img

சுகாதாரமான குடிநீர் கோரி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

சுகாதாரமான குடிநீர் கோரி  குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜுன் 24-  சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். காரை கிராமம் அருகேயுள்ள விஜயகோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் டயர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை, சமத்துவபுரம் குடியிருப்புக்கு அருகேயுள்ள ஓடையில் திறந்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில், அந்த ஓடைப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெட்டப்பட்ட பொதுக் கிணற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் குழந்தை முதல், பெரியவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதோடு, உடன்நலன் பாதிக்கப்பட்டு அன்றாடம் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிப்புக்குள்ளான சமத்துவபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுகாதாரமான குடிநீர் கோரி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு அலுவலர்களிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், காரை சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வாரத்துக்கு ஒருமுறை கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரை நாள்தோறும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், ஓடையில் கலக்கும் கழிவுநீரை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கிரேஷ் பச்சாவை சந்தித்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.