tamilnadu

img

திருவிளையாட்டம் ஊராட்சியில் சாலைகளை சீரமைக்கக்கோரி மறியல்

ருவிளையாட்டம் ஊராட்சியில் சாலைகளை சீரமைக்கக்கோரி மறியல்

மயிலாடுதுறை, மே 15-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உட்புற சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக கேட்பாரற்று மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  குறிப்பாக காளியம்மன் கோவில்தெரு, ஆலக்கரை, கோவில்பத்து கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை, கடந்த நவம்பர் மாதத்தில் வாலிபர் சங்கத்தினர் நூதனப்போராட்டம் நடத்தியபோது, அதிகாரிகள் உறுதியளித்ததுப்போல் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காத நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று திருவிளையாட்டம் கடைவீதியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.  கிளைச் செயலாளர் தீபன் கோஸ், முன்னாள் கிளை செயலாளர்கள் குணாளன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. சிம்சன், ஜி. வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அம்மையப்பன், அய்யப்பன், டி.ஆர். ராணி, குணசுந்தரி, செல்வபாக்யவதி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.  திருவிளையாட்டம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம உட்புற சாலைகளையும் உடனடியாக சீரமைத்திடு, காளியம்மன் கோயில் தெரு, ஆலக்கரை, கோவில்பத்து கிராம இணைப்பு சாலையை புதிதாக அமைத்திடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாலை மறியல் போராட்டத்தையடுத்து, தரங்கம்பாடி வட்டாட்சியர் சதீஷ், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துபூர்வ உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.