சென்னை, ஜூன் 26 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் ஜூன் 25 அன்று நடைபெற்ற விவாதங் களுக்கு அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்து பேசினார். பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஒரு புறவழிச் சாலை, ஒரு நடை மேம்பாலம், 6 சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்துதல் மூன்று ஆற்று பாலங்கள் மற்றும் ஒரு மழை நீர் வடிகால் கட்டுதல் ஆகிய பணிகள் மற்றும் ஆறு புறவழிச் சாலைகள் ஒரு ஆற்று பாலம் அமைக்க தேவையான நில எடுக்கும் பணிகள் ரூபாய் 1050 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சீரான சாலைப் போக்குவரத்திற்கு பாலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஆறுகள், நதிகள் மற்றும் ஓடைகளை கடக்கவும் மற்றும் இருப்புப் பாதையைக் கடக்கவும் பாலங்கள் மிகவும் அவசியமாகின்றன. நெடுஞ்சாலைத் துறையின் மூலம் 9 ஆயிரத்து 479 பாலங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ளன. இந்த பாலங்களை ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மையை கண்டறிந்து பழுதுகள் ஏற்பட்டு இருப்பின் அதனை உடனுக்குடன் சீரமைக்க வேண்டி உள்ளது. இதனை செயல்படுத்த தனிக் கவனம் செலுத்தி நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட பாலங்கள் சிறப்பு ஆய்வு பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்.
அகலப்படுத்தப்படும் சாலைகள்
முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 200 கிலோமீட்டர் நீள சாலைகளை நான்கு வழித்தடம் ஆகவும் 550 கிலோ மீட்டர் நீளச் சாலைகளை இரு வழி தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். மேலும் அனைத்துக் கால நிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற முதலமைச்சரின் முத்தாய்ப்பான திட்டத்தின் கீழ் 50 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். புறவழிச் சாலைக்கு ரூ. 321 கோடி சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகள் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் படும். அதேபோல், தென்காசி, ஆர்க்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களுக்கு புறவழிச் சாலையும் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை புதிய இணைப்பு சாலையும் ரூ. 321 கோடி செலவில் அமைக்கப்படும்.
நிலம் எடுப்பு பணிகள்!
தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் சுற்றுச்சாலை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புற வழிச்சாலை, திருத்துறைப்பூண்டி, வத்திராயிருப்பு, மல்லாங்கிணறு ஆகிய நகரங்களுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படும். மதுரை வெளிவட்டச் சாலை முதல் சிவகங்கை சாலை வரை புதிய சாலை அமைக்கப்படும். தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். இந்தப் பணிகளுக்கு தேவையான நிலம் எடுக்கும் பணிகள் ரூ. 159 கோடியில் மேற்கொள்ளப்படும்.
விரிவான திட்ட அறிக்கை!
மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மணல்மேடு முதல் சேத்தியா தோப்பு வரை புதிய சாலை அமைக்கவும் மதுரை மாநகரில் சிட்டம்பட்டி முதல் தென்காசி சாலையில் உள்ள ஆலம்பட்டி வரை புதிய வெளிவட்டச் சாலை அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். நடை மேம்பாலம்! திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டச்சத்திரம் நகரிலும், திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகிலும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் 28 கோடி ரூபாயில் அமைக்கப்படும். தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூபாய் 200 கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ. 680 கோடி மதிப்பீட்டில் இதே மாவட்ட சாலையாக தரம் உயர்த்தப்படும்.” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.