2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை
சென்னை, ஜூலை 26 - இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை தமிழகம் வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்ட ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத் துறையில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு என ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழா முடிந்த பிறகு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி சென்றார். இரவு 10.30 மணியளவில் திருச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, பிரதமர் மோடி கார் மூலம் சென்று, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27), அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.