சென்னை, ஜன. 8 - கோவை-பல்லடம் இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஞாயிறன்று (ஜன.8) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகையில், “ராமலிங்க வள்ளலாரைப் போன்ற மனிதத் தன்மையுடனும், காந்தியைப் போலக் கொள்கைப் பிடிப்புடனும் வாழ வேண்டும் என்பதை உணர்த்தி வந்தார். வள்ளலார் போற்றிய மனிதத் தன்மையும், காந்தியின் மதநல்லிணக்கமும்தான் இன்றைய காலக்கட்டத்திற்கு மிக மிகத் தேவைப்படுகிறது. அவரது ஆன்மீகம் என்பது மதநல்லிணக்க ஆன்மீகமாகும், அவரது சமய நெறி சமரச சுத்த சன்மார்க்க நெறியாக எப்போதும் இருந்தது. இத்தகைய நெறிகளே இன்று தேவையாக இருக்கின்றன. பொள்ளாச்சி உள்ள கோவை சாலை மற்றும் பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு “அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்” பெயர் சூட்டப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், அர. சக்கரபாணி, வி. செந்தில்பாலாஜி, செஞ்சி கே.எஸ். மஸ்தான், என். கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.