செம்பனார்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை, செப். 18- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு, மாவட்ட கூடுதல் ஆட்சியர் கோகுல் தலைமை வகித்தார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சுவாமிநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் கோகுல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாத்திரங்கள், வாழை இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், துணி மற்றும் சணல் பைகள், காகித உறிஞ்சி குழல்கள் போன்றவை மட்டுமே பயன்படுத்தி, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன. செம்பனார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்று நிறைவுற்றது. தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.