பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு
கரூர், ஜுன் 16- கரூர் மாவட்டம் புகளூர் வட்டத்திற்கு உட்பட்ட பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மக்கள், குடியிருக்க வீடு இன்றி வாடகை வீட்டிலும் மற்றும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாகவும் வசித்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விலையில்ல வீட்டு மனை பட்டா கேட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறார்கள். மனு கொடுத்தவர்களுக்கு புகளூர் வட்டாட்சியர், பவித்திரம் கிராமம் புல எண் 1278. மற்றும் 1279–ல் பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 30 நபர்களுக்கு வழங்கப்படும் என்றும், அதே கிராமத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் 10 நபர்களுக்கு, நெடுங்கூர் கிராமம் புல எண் 482-ல் வழங்கப்படும் என்றும், புன்னம் கிராமத்தைச் சேர்ந்த முத்து நகர், குளத்தூர், சிற்றூர்களில் வசிக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், காருடையாம்பாளையம் கிராமம் பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு நெடுங்கூர் புல.எண் 621-லும் காருடையாம்பாளையம் ஆதிதிராவிடர் நலத்துறை கையப்படுத்தப்பட்ட சர்வே எண் 539/17 இல் பட்டா தயார் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புகளூர் வட்டாட்சியர் உறுதியளித்திருந்தார். ஆனால் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இச்செயலை கரூர் மாவட்ட கட்டுமான சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. கரூர் மாவட்டம், புன்னம் கிராமம், குளத்தூரில் வசிக்கின்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் இருந்த நவலடியான் புளூ மெட்டல் கல்குவாரியில் பணியாற்றி வந்துள்ளர்கள். நவலடியான் புளூ மெட்டல் கல்குவாரியில் உரிமையாளர் இடத்தில் கடந்த 05-08-2012-ம் ஆண்டு தீப்பிடித்து சுமார் 17 வீடுகள் சேதமடைந்து அரவக்குறிச்சி வட்டாட்சியர் மூலம், தலா 2,500 விகிதம் தமிழக அரசால் குடியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி, அம்மக்கள் அன்று தொட்டு இன்று வரை வீடு வாசல் இன்றி கல்குவாரியின் உரிமையாளர் அரவணைப்பில் குடியிருந்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக தங்களுக்கு குடியிருக்க வீடு கொடுத்து, அடைக்கலம் கொடுத்து, உங்களை பாதுகாத்து வந்தேன். எனது குடும்ப சூழ்நிலை கருதி நான் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்க வேண்டியுள்ளது. இடத்தை காலி செய்து வெளியேற வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளர் கூறியுள்ளார் . இதனால், இங்கு பல ஆண்டுகளாக குடியிருந்த மக்கள் குடும்பத்துடன் வீடு வாசல் இன்றி நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில், வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, கரூர் மாவட்ட கட்டுமான சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர். உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கரூர் மாவட்டக் குழு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணி, கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் ப.சரவணன் ஆகியோர் தெரிவித்தனர்.