tamilnadu

img

ஜனநாயகப் போராட்டத்தின் முதல் படியாக புதிய சட்டமன்றம் இருக்கும்

ஜம்மு-காஷ்மீர் மக்களின் மகத்தான தலைவர் முகமது யூசுப் தாரிகாமி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரான தாரிகாமி, குல்காம் தொகுதியில் மீண்டும் மகத்தான வெற்றிபெற்றுள்ளார். இத்தொகுதியில் இம்முறை பாஜகவின் ஆதரவோடு களமிறங்கிய இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பை எதிர்கொண்டு மக்களின் பேரன்பைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார். 

தேர்தல் பிரச்சாரக் களத்தில் இருந்த மக்கள் நாயகன் முகமது யூசூப் தாரிகாமியை, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, ஸ்ரீநகருக்கு சுற்றுப்பயணமாக சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளருமான களப்பிரன் நேரில் சந்தித்தார். அவரை உற்சாகமாக வரவேற்ற முகமது யூசுப் தாரிகாமி, தீக்கதிர் நாளிதழுக்காக நேர்காணலும் அளித்தார்.

நடந்து முடிந்து, அக்டோபர் 8 செவ்வாயன்று முடிவுகளும் வெளியாகியுள்ள ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தகைய சூழ்ச்சிகளையெல்லாம் மேற்கொண்டது என்று விரிவாக விவரித்தார் தாரிகாமி. குறிப்பாக, காஷ்மீர் தேர்தல் களத்தில் இந்து மத அடிப்படைவாத கட்சியான பாஜகவும் இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சியான ஜமாத் இ இஸ்லாமிக் கட்சியும் கூட்டுச்சேர்ந்து கொண்டு அரங்கேற்றிய சூழ்ச்சிகளை விவரித்தார். அந்த நேர்காணலின் அம்சங்கள் வருமாறு:

காஷ்மீர் தேர்தல் எப்படி நடந்தது?

நன்றாகத்தான் தேர்தல் நடந்திருப்பதாக கருதுகிறோம். எங்கும் ஒரு அசம்பாவிதம் கூட நடைபெறாமல், மறு தேர்தல் கூட நடத்தப் படாமல் அமைதியாகத்தான் நடந்தது. மக்கள் இந்தத் தேர்தலில் வியக்கத்தக்க முடிவுகளை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கி றோம். 

காஷ்மீர் மக்களுக்கான பிரச்சனைகளை இந்தத் தேர்தல் தீர்த்துவிடுமா?

தேர்தல் மட்டுமே எல்லா பிரச்சனை களுக்கும் தீர்வாகிவிடாது தான். ஆனால் தேர்தல் என்கிற ஒரு வழி மட்டும் தானே  இப்போது காஷ்மீர் மக்களுக்கு மிச்சமிருக் கிறது. ஆகவே தேர்தல் ஒரு படி நம்மை முன்னே நகர்த்தும் என்று நம்பலாம்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜக தில்லுமுல்லுகள் செய்ய வாய்ப்புள்ளதா?

நான் அப்படி கருதவில்லை. இந்தியா விலேயே 2018 முதல் சட்டமன்றம் செயல்படாமல் இருக்கும் ஒரே மாநிலம் ஜம்மு-காஷ்மீர் தான். 2019ல் இங்கே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போதே இங்கும் தேர்தல் நடத்தியிருக்கலாம். கேட்டால், தீவிரவாத அச்சுறுத்தல் என்று காரணம் சொன்னார்கள். 2019 ஆக்ஸ்ட் 5ல் இந்த மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக்கி துண்டாடினார்கள். அப்போதும் தேர்தல் நடத்தியிருக்கலாம். ஆனால், மாநிலத்தில் அமைதி இல்லை என்றார்கள். 2024 நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தங்களால் தான் ஜம்மு-காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்று சொன்னார்கள்.  ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அவர்கள் இங்கே சட்டமன்றத் தேர்தல் நடத்தவில்லை. காரணம், அவர்களால் காஷ்மீர் மக்கள் மத்தியில் வெற்றி பெற முடியாது என்பதுதான். அவர்கள் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பிருந்தால் இத்தனை நாட்கள் அவர்கள் தேர்தல் நடத்தாமல் இருந்திருக்கமாட்டார்கள். இப்போது ஜாமத் இ இஸ்லாமிக், ரஷீத் போன்ற புதிய வாய்ப்புகளை வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஜம்முவில் பாஜக கணிசமான சீட்டுகள் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறதே?

காஷ்மீருக்குள் அவர்களால் வெற்றி பெற இயலாது. ஆனால் ஜம்முவில் அவர்கள் இந்து ஓட்டுகளை ஒருங்கிணைத்து சில இடங்களில் வெற்றி பெற முயற்சித்துள்ளனர். இது நீண்ட காலம் நீடிக்காது. அயோத்தியிலேயே அவர்கள் கோவில் கட்டி ஓட்டு பெற்றுவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அங்கேயே மக்கள் அவர்களை தோற்கடித்தார்கள். மக்களின் அத்தியாவசியத் தேவைகளான மருத்துவம், கல்வி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாமல் ஓட்டுவாங்க முடியாது. ஜம்முவிலும் இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் பாஜக இம்முறை தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

தங்கள் தொகுதியின் கள அனுபவம் குறித்து சொல்லுங்களேன்?

நான் குல்காம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளேன். அங்கே ஒன்றிய அரசின் உதவி யோடு, பாஜகவின் மறைமுக கூட்டாளிகள் என்னை எதிர்த்து நிற்கிறார்கள்.  கடந்த முப்பது  ஆண்டுகளுக்கும் மேலாக ஜமாத் இ இஸ்லாமிக் கட்சி தேர்தலை புறக்கணித்து வந்த ஒரு கட்சி. அது  அடிப்படைவாதக் கருத்துக்களை கொண்ட ஒரு கட்சி. நாட்டிற்கு வெளியே இருந்து  செயல்படும் தீவிரவாதக் குழுக்களின் உதவி யோடு காஷ்மீரில் வன்முறையை, பிரிவினை வாதத்தை செயல்படுத்தும் கட்சி. காஷ்மீரை தனி  நாடாக அல்ல, பாகிஸ்தானோடு இணைக்க வேண்டும் என்று சொல்லும் ஹிஜ்புல் முஜாகிதின் அமைப்பின் அரசியல் முகமாக காஷ்மீரில் செயல்படும் கட்சி ஜமாத் இ இஸ்லாமிக். அக்கட்சி ஒரு தடைசெய்யப்பட்ட கட்சியும் கூட. அந்தக் கட்சி ஒன்றிய அரசின் உள்துறையோடு தங்கள் இயக்கத்தின் தடையை நீக்கக்கோரி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. பாஜகவால் ஜம்முவில் தான்  போட்டியிட முடியும். காஷ்மீரில் அவர்களால் போட்டியிட முடியாது. ஆகவே ஜமாத் இ இஸ்லாமிக் ஒன்றிய அரசோடு நடத்திய பேச்சு வார்த்தையின் நீட்சியாக இங்கே ஒன்று நடந்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட ரகசிய புரிந்து ணர்வின் அடிப்படையில் ஜமாத் இ இஸ்லாமிக் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. கட்சி தடை செய்யப்பட்ட கட்சி. ஆகவே  தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை சுயேட்சை வேட்பாளர்களாக சில தொகுதிகளில் நிறுத்தும் திட்டத்தை பாஜக ஆசியோடு செயல்படுத்தியது. அப்படி அவர்கள் போட்டியிடும் ஒரு தொகுதி சிபிஐ(எம்) போட்டியிடும் குல்காம். மற்ற தொகுதிகளை விட குல்காமில் அவர்கள் முழு  கவனம் செலுத்தினார்கள். காரணம் இஸ்லா மிய அடிப்படைவாதிகளுக்கு கம்யூனிஸ்டுகள் மீது இருக்கும் வெறுப்பின் தொடர்ச்சியாக அவர்கள் குல்காம் தொகுதியின் வெற்றியை  பார்க்கிறார்கள். மற்றவர்கள் வெற்றி பெறு கிறார்களோ இல்லையோ; மதச்சார்பின்மை யை, அரசியல் சாசனத்தை மதிக்கின்ற கம்யூ னிஸ்டுகள் வெற்றிபெறக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே கடந்த காலங்களைப் போல் அல்லாமல் நாம் இம்முறை இரண்டு எதிரிகளை காஷ்மீர் தேர்த லில் எதிர்கொள்கிறோம். ஒன்று மத்தியில் உள்ள பாஜக. மற்றொன்று காஷ்மீர் தேர்தல் களத்தில் புதிதாக முளைத்துள்ள அடிப்படைவாதிகள். இம்முறை களம் கடினமாக இருக்கிறது. இருந்த போதிலும் உறுதியாக இத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

இன்ஜினியர் ரஷீத் காஷ்மீர் தேர்தல் திசையை தீர்மானிப்பார் என்று ஊடகங்கள் பேசுகின்றனவே..?

இன்ஜினியர் ரஷீதை அப்படித்தான் ஊடகங்கள் சித்தரிக்கிறார்கள். ஆனால் அவரும் அடிப்படை வாதத்தை முன்வைப்பவர் தான். ஜமாத் இ இஸ்லாமிக் வேட்பாளரை ஆதரிப்பதற்காக என்னை எதிர்த்து ரஷீத் அறிக்கை வெளியிட்டார். அவரின் அந்தக் குரல் ஒரு மாஸ்டரின் குரல். அந்த மாஸ்டர் ஒற்றைத் தலைமை கொண்ட மாஸ்டர். அது தில்லியிலிருந்து வந்து இங்கு அவரின் குரல் வழியாக ஒலிக்கிறது. முன்பு மக்களுக்கு இது புரியாமல் இருந்தது. ஆனால் இம்முறை மக்கள்  ஓரளவு புரிந்து வைத்துள்ளார்கள் என்றே  கருதுகிறேன். நான் கூட அந்த இன்ஜினி யருக்கு எதிராக “பொறியாளர்கள் இம்முறை போதுமான அளவு அவர்களுக்கு தோதாக வடிவமைக்கப்பட்டுள்ளார்கள்” என்ற ஒரு சொற்றொடரை பயன்படுத்தினேன். ஒரு பத்திரிகையாளராக இந்த சொற்றொடர் உங்களுக்கு பல இடங்களில் பயன்படும். ஆகவே இதை குறித்துக் கொள்ளுங்கள். ஜமாத் இ இஸ்லாமி, ரஷீத் போன்றவர்களை பாஜக ரகசிய உடன்படிக்கையோடு இம்முறை களமிறக்கியுள்ளது.

புதிதாக உருவாகும் மாநில அரசு பிஎஸ்ஏ உள்ளிட்ட சட்டங்களை திரும்பப்பெறுமா?

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். இந்தியா வில் உள்ள மாநிலங்களில் சில யூனியன் பிரதேசத்திலிருந்து மாநிலம் என்கிற தகுதிக்கு உயர்ந்துள்ளதே தவிர, மாநிலம் என்பதிலிருந்து யூனியன் பிரதேசம் என்ற நிலைக்கு தாழ்வுபடுத்தப்படவில்லை. அப்படி தரம் இறக்கம் செய்யப்பட்ட ஒரே மாநிலம் ஜம்மு - காஷ்மீர் தான். அதே போல் கடந்த காலங்களில் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் பிரிக்கப்படும் போது அந்த சட்டமன்றத்தில் மாநில எல்லைகள் உள்ளிட்ட அனைத்தும் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றது. அதன் நிறைவாக புதிய மாநில உருவாக்கம் குறித்த தீர்மானமும் கூட  அந்த சட்டமன்றத்திலேயே தான் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி கலைக்கப்பட்டு  சட்டமன்றம் செயல்படாத காலத்தில் மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆகவே மற்ற மாநில சட்டமன்றங்களைப் போல ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தை அவ்வளவு எளிதில் செயல்பட பாஜக அனுமதிக்காது. இங்குள்ள சில தேவையற்ற சட்டங்களை திரும்பப்பெற வைப்பதும் அவ்வளவு எளிதில் நடைபெறாது. உங்கள் தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி என்னென்ன பேசுகிறார்; அவர் இங்கு பணியாற்றியுள்ளார். என்னை அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் இப்போது அங்கு செய்வது போன்ற குடைச்சல்கள் இங்கும் வரக்கூடும். ஆனாலும் அதற்கான ஜனநாயக போராட்டத்தின் முதற்படியாக புதிய சட்டமன்றமும், புதிய அரசும் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த முதல் கட்ட வெற்றியை பிடித்துக்கொண்டு தொடர்ந்து நமது போராட்டத்தை நீதிமன்றம், மக்கள் மன்றம் என்று எல்லா இடங்களிலும் தொடர்வோம்.

கடைசியாக நீங்கள் சொல்ல விரும்புவது?

எனக்கு இரண்டு கேள்விகள் இந்தத் தேர்தலில் இருக்கிறது. ஒன்று மத்தியில் ஆட்சி யில் உள்ள பாஜகவை நோக்கிய முதல் கேள்வி. பிரதான அரசியல் களத்தில் செயல்படும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இவ்வளவு நெருக்கடி மிகுந்த சூழலிலும் ஜனநாயக வழிகளில் மட்டுமே மக்களோடு மக்களாக செயல்பட்டு வருகிறோம். நீங்களோ, (பாஜக) எங்களை இழிவுபடுத்துகிறீர்கள், எங்களை எவ்வளவு முடியுமோ அந்த அளவு முடக்குகிறீர்கள். ஆனால் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத, பிரிவினைவாதத்தை முன்வைத்து, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஜமாத் இ இஸ்லாமிக் போன்ற அமைப்புகளை இந்த ஜனநாயக தேர்தல் களத்தில் பங்கேற்க வழிவகை செய்துகொடுக்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?  இரண்டாவது கேள்வி, ஜமாத் இ இஸ்லாமிக் கட்சிக்கு. நீங்கள் எத்தனை பேரை கடந்த காலங்களில் தேர்தல் அரசியலில் பங்கேற்ற ஒரே காரணத்திற்காக படுகொலை செய்தி ருப்பீர்கள். தேர்தல் அரசியலில் பங்கேற்பது “இஸ்லாமிய விரோதம்” என்று முத்திரை குத்தி இத்தனை ஆண்டுகாலம் பிரச்சாரம் செய்து வந்தீர்கள். இம்முறை திடீரென்று தேர்தல் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததில் இருக்கும் ரகசியம் என்ன? திடீரென்று இம்முறை நீங்கள் “யூ டர்ன்” அடிப்பதற்கு பின்னால் உள்ள  நோக்கம் என்ன?  இந்த இரண்டு கேள்விகளைத் தான் இந்தத் தேர்தலில் காஷ்மீர் மக்கள் சார்பாக நான் முன் வைக்கிறேன்.