தருமபுரி, அக்.22- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 16,000 கன அடியில் இருந்து 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, திங்களன்று காலை அதிகரித்து, 18 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இந்நிலையில் செவ்வாயன்று காலை மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, இருபதாயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தமிழக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதன் எதிரொலியாக, நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடியிலிருந்து 7,500 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 96.90 அடியிலிருந்து 98.56 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதிமுதல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், ஆற்றங்கரை ஓரம் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.