வரிசைப் படுத்துங்கள் பார்க்கலாம்
அமலா, பாலன், சின்னப்பா, டயானா, இப்ராஹிம் ஐந்து பேரும் ஒரே தெருவில் வசிக்கிற நண்பர்கள். விடுமுறையில் மழை காரணமாக வெளியே போக முடியாமல் எல்லோரும் டயானா வீட்டில் கூடி அரட்டையடித்துக் கொண்டு இருந்தார்கள். “ரொம்பவும் போரடிக்குதுடா,” என்றான் இப்ராஹிம். இதைக் கேட்டுக் கொண்டே வந்த டயானாவின் அம்மா, “ஒரு கணிதப்புதிர் போடுறேன். மனக்கணக்கா இல்லை, நீங்க நோட்டுல எழுதியே விடையைக் கண்டுபிடிக்கலாம். யார் முதல்ல முடிக்கிறாங்கன்னு பார்ப்போம்” என்றார். ஆளுக்கொரு நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டார்கள். அம்மா புதிரைச் சொன்னார். அவர்கள் எழுதிக் கொண்டு கூட்டலும் பெருக்கலும் வகுத்தலும் கழித்தலும் மாறி மாறி வந்த கணக்கைச் செய்ய ஆரம்பித்தார்கள். சிறிது நேரம் கடந்த பிறகு- பாலனுக்கு முன்பாகவே அமலா கணக்கைச் செய்து விடையைக் கண்டுபிடித்தாள். ஆனால் அவளுக்கு முன்பே சின்னப்பா முடித்து விட்டான். டயானா இப்ராஹிமுக்கு முன்பாகவே விடையைக் கண்டுபிடித்தாள், ஆனால் பாலனுக்குப் பிறகுதான் கணக்கை முடித்தாள். இப்போது, முதலில்முடித்தது யார், இரண்டாவதாக யார், மூன்று, நான்கு, ஐந்தாவது யார் என்று கண்டுபிடித்து வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்.