நீங்கள் சாகடிக்கப்படாமல் இருக்க என்னால் சில ஆலோசனைகளைச் சொல்ல முடியும். இந்த காடு மலைகள், கடினப்பாறைகள் எல்லாம் சூறையாடப்படும் போது வனத்தின் மீதான பழங்குடி மக்களின் உரிமைகளை கோரக்கூடிய ஒருவராக நீங்கள் இல்லாத பட்சத்தில் உங்களை யாரும் கொல்லப் போவதேயில்லை. சனாதனக் கொடுமைகளை சகித்துக் கொண்டு சமத்துவம் பற்றி பேசாத ஒருவராக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு உயிர் வாழ்வதற்கு மிக சுதந்திரம் கிடைக்கிறது. உங்களில் ஒரு படி தாங்கிக்கொண்டு ஒரு ஆணுக்கு அடங்கிய ஒரு பெண்ணாக அல்லது அவனது ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும், வக்கிரங்களுக்கும் வடிகாலாக ஒரு பிள்ளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாக, பரம்பரைச் சொத்தில் பங்கு கேட்கத் துப்பில்லாதவளாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நீங்கள் கொல்லப்படப் போவதில்லை. இந்த நாட்டினுடைய மக்கள் தொகையில் ஒரு 11 விழுக்காடானவர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 80 விழுக்காட்டை அபகரித்துக் கொண்டிருப்பது என்பதும், 50 விழுக்காடு மக்கள் மாதம் வெறும் 6 ஆயிரம் ரூபாயில் வாழ்வதற்கான நிலைமை பற்றி எந்த புகாரும் அளிக்காமல் இருப்பீர்களானால் நீங்கள் உயிர் வாழ்வதற்கான எந்த ஆட்சேபனையும்இல்லை. இந்த நாட்டினுடைய பிரதமர் பதவியேற்ற வுடனே முதல் கையெழுத்தை விவசாயிகளு டைய கனவுகளுக்காக கையெழுத்திட்டதாக ஜம்பமடித்துக்கொண்டார். அப்படி பிரதமர் கையெழுத்திட்ட வேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இந்த 6 மாதத்தில் 557 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செய்திருக்கிறார்கள்; அது போல நமக்கும் நேராமல் இருப்பதற்காக, மோடிக்கு நாம் நன்றி சொல்லவேண்டாமா? யாருடைய வீட்டிலாவது நுழைந்து அவர்களது அடுப்பில் வெந்துகொண்டிருப்பது ஆட்டுக்கறியா, மாட்டுக்கறியா என்று ஆய்வு செய்து; அந்த வீட்டுக்காரர் ஒரு இஸ்லாமியர் என்று நினைத்து நீங்களாகவே அவருக்கு தண்டனை கொடுத்தால், ஒரு வேளை, உங்களுக்கு உயிர் வாழ வாய்ப்பிருக்கிறது.
குறை சொல்லி விடாதீர்கள்
இந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் பட்டேல் சிலையின் உயரத்தை பற்றி வியந்து பேசலாம். அல்லது ராமர் கோவில் பிரம்மாண்டத்தைப் பற்றி பேசலாம். அப்படி பேசும் போது அங்கே உள்ள கூரை ஒழுகுவது பற்றி எந்த குறையும் சொல்லக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு பேசுவது என்பது எரிச்சலூட்டக்கூடியது.
ரம்மி ஆடி பணத்தைத் தொலையுங்கள்
நீங்கள் கிரிக்கெட் பாருங்கள். ஒவ்வொரு செல்போனிலும் ஆப்களை டவுன்லோடு செய்து பாருங்கள். சினிமா பாருங்கள். ஏராளமான சீரியல்களைப் பார்த்து ரிலாக்சாக இருங்கள். இல்லையென்றால் ஆளுநரின் ஆசைப்படி ஆன் லைனில் ரம்மி ஆடி உங்கள் பணத்தைத் தொலையுங்கள். இப்படியாக நீங்கள் இருப்பதை விட்டுவிட்டு நீங்கள் சமுதாயத்தைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ பேசக்கூடாது.
‘வலியை உணராதிருங்கள்’
ஒரு பெண்ணாகவோ, ஒரு பழங்குடியாக வோ, ஒரு தலித்தாகவோ, ஒரு சிறுபான்மையின ராகவோ, ஒரு உழுகுடியாகவோ, ஒரு தொழி லாளியாகவோ வாழ்வதிலிருக்கிற வலியை நீங்கள் உணரக்கூடாது என்பதற்காக காற்றி லே மயக்கமருந்து கலப்பதற்கான திட்டங் களையெல்லாம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திட்டங்களினால் நமது மூளையும், இருதயமும் மரத்துப் போகிற சாத்தியம் உண்டு. அவற்றை பின்னாளில் சென்று நீங்கள் கவிதை எழுதினால் சாகித்ய அகாடமி விருது உங்களுக்கு கிடைக்கலாம். நம்முடைய உடல் சுதந்திரமானதாக நமக்கு தோன்றுகிறது. ஆனால் நமது மனம் என்பது சிறைப்பட்டுள்ளது. நமது நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. நமது உரையாடல்கள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உளவாளி இருந்து நம்மை நாமே கண்காணித்து ஒரு உளவாளியாக அரசுக்கு உளவு சொல்லக்கூடியவர்களாக நம்மையே மாற்றியிருக்கிறார்கள்.
முனை மழுங்கும் எழுத்துக்கள்
யாரையும் தொந்தரவு செய்யாத இலக்கியங்களை எழுதக்கூடியவர்களாக; மானே தேனே பூவே புஷ்பமே என்று எழுதக் கூடியவர்களாக - நாமே நம்மை கீழிறக்கிக் கொண்டிருக்கிறோம். நாமே நம்மை மொன்னையான, தட்டையான, யாரையும் தொந்தரவு செய்யாத, மழுங்கிய சொற்களைத் தேர்வு செய்பவர்களாக சுய தணிக்கை செய்து கொள்வதற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். சிறைக்கொடுமைகளுக்கும், வதை முகாம்களுக்கும் யாரும் நம்மை தள்ளிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனத்தோடு இருந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எழுத்து யாரையும் தொந்தரவு செய்வதில்லை; யாருடைய அகநிலையையும் பாதிப்பதில்லை; யாருடைய கருத்துலகத்தையும் பாதிக்க வில்லை என்று சொன்னால் நாம் எழுதுவது காலத்திற்கும் காகிதத்திற்கும் கேடு. 50வது ஆண்டில் - பொன்விழாவில் அடியெடுத்து வைக்கும் தமுஎகசவுக்கு, தனது எழுத்தாளர்களை, தனது ஊழியர்களை பயிற்று விப்பது தான் முதல் வேலை. ஒரு கடந்த கால இதயத்தோடு, கடந்த கால மூளையோடு, அழுகிய சதையோடு அவர்கள் படைக்க விரும்பு கின்ற ஒரு இந்துத்துவ அரசு, ஒற்றை ஆட்சி, ஒற்றைச் சமூகம் இங்கு உருவாவதைத் தடுப்ப தற்கு முயற்சிக்கிற நம் ஒவ்வொருவரையும் கொன்றழிக்கத்தான் இந்த ஆட்சியாளர்கள் திட்ட மிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக யோசிக்கும் நம் மூளையை, நம் சிந்தனையை அவர்களால் கொல்ல முடியாது.
சிந்துவெளி நாகரீகத்தின் நூற்றாண்டு
இந்த ஓராண்டில் கருத்தியல் தளத்தில் மிகப் பெரிய ஒரு சிந்தனைத் திறப்பை வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கு இன்றைய காலக்கட்டத் தோடு பொருத்திப் பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்த சிந்துவெளி நாகரீகத்தின் நூற்றாண்டு, வரும் செப்டம்பர் 20 அன்று 1924-ல் சர் ஜான் மார்சல் அறிவித்ததன் நூற்றா ண்டு ஆகும்.அந்த நூற்றாண்டு கொண்டாட்டங் கள் வழியாக நாம் பயணிப்போம். இந்த நாடு யாருடைய நாடு? இந்த நாட்டின் பூர்வ குடிகள் யார்? இன்றைக்கு இருக்கக் கூடியவர்கள் ஏன் வரலாற்றை திரிக்க விரும்பு கிறார்கள்? அவர்கள் கொண்டு வந்த மொழி எது? இந்த சமூகம் வாழ்வதற்கு அவர்கள் ஏதா வது உருப்படியான காரியம் செய்திருக்கிறார் களா? குண்டூசி முதல் தயாரித்தளித்த நம் மக்களின் மொழி, இனம் என்பதை சிந்து வெளி நாகரீகத்தின் வழியாகத்தான் நாம் பேச முடியும். இவற்றையெல்லாம் நாம் பேசக்கூடாது என்பதற்குத்தான் இன்றைக்கு குற்றவியல் சட்டங்களையெல்லாம் கொண்டு வந்திருக் கிறார்கள்.
நாம் உயிர் வாழ்வதற்கான போராட்டம்
கடந்த 6 மாதங்களில் 5 தணிக்கைச் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. மீடியாவை கட்டுப்படுத்துவதற்கு, அச்சு ஊடகத்தை கட்டுப்படுத்துவதற்கு, ஒட்டு மொத்த சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு 5 தணிக்கைச் சட்டங்களை ஒன்றிய ஆட்சியாளர் கள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த 5 தணிக்கை சட்டங்களையும், 3 குற்றவியல் சட்டங்களையும் மிக நேருக்கு நேர் எதிர் கொண்டு வழக்கறிஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது வழக்கறிஞர் களின் போராட்டம் அல்ல; அது நாம் உயிர் வாழ்வ தற்கான போராட்டம். மிக எளிய அறவழிப் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டம். அந்த உண்ணாவிரதம் கூட கைது செய்கிற அள விற்கு ஒரு கொடிய செயலாக, தேச விரோதத் தோடு மாற்றப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அதை எதிர்த்து நிற்க வேண்டாமா?
சமூக மாற்றமே இன்றைய தேவை
நாம் எல்லோரும் கொண்டாடக்கூடிய மார்க்ஸ் சொன்னார். “வியாக்யானம் செய்வத ற்குத் தான் எல்லோரும் இருக்கிறார்கள். அதை மாற்றி அமைப்பது தான் இன்றைக்கு தேவை” என்று சொன்னார். அத்தகைய மகத்தான சமூக மாற்றத்தை ஒரு புதிய கலை இலக்கிய வடிவத்தின் வழியாகவும், உள்ளடக்கத்தின் வழி யாகவும் நாம் செய்ய வேண்டும். அதற்கு இந்த ஓராண்டை நாம் பயன்படுத்திக்கொள்வோம்.
மதுரையில் நடைபெற்ற தமுஎகச பொன்விழாவில் பேசியதில் இருந்து... - தொகுப்பு: இலமு, திண்டுக்கல்.