திருப்புறம்பியத்துக்கு மீண்டும் பேருந்து இயக்க சிபிஎம் கோரிக்கை
கும்பகோணத்தில் இருந்து கொத்தங்குடி வழியாக திருப்புறம்பியத்துக்கு மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் என சிபிஎம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம்- ஜெயங்கொண்டம் சாலையில் நீலத்தநல்லூர் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சுற்றி தேவனாஞ்சேரி, தட்டுமால், கொத்தங்குடி, மேலாத்துகுறிச்சி, மாஞ்சேரி, கொந்தகை, அதியம்பநல்லூர், திருப்புறம்பியம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்காக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து, அதிகாலையில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு அசூர், தேவனாஞ்சேரி, மேலாத்துகுறிச்சி, கொத்தங்குடி, ராமன் தெரு உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் சென்று, காலை 6.30 மணிக்கு திருப்புறம்பியத்தை சென்றடையும். பள்ளி, கல்லூரி நேரத்துக்கு ஏற்றவாறு மீண்டும் திருப்புறம்பியத்தில் இருந்து புறப்பட்டு ராமன் தெரு, கொத்தங்குடி, மேலாத்துகுறிச்சி, தேவனாஞ்சேரி வழியாக கும்பகோணத்துக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 முறை வரை இந்த பேருந்து இயக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக திருப்புறம்பியம் வரை இயக்கப்படுவது இல்லை. கொத்தங்குடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கணேசன் கூறுகையில், கும்பகோணத்தில் இருந்து கொத்தங்குடி வழியாக திருப்புறம்பியம் வரை இயக்கப்பட்ட பேருந்து, அந்த பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. விளை பொருட்களை சந்தைக்குக் கொண்டு செலவும், நகரப் பகுதியில் இருந்து விலை பொருட்கள் வாங்கி வருவதற்கும் இந்தப் பேருந்து உதவியாக இருந்தது. ஆனால், தற்போது பேருந்து இயக்கடாததால், நகரப் பகுதிகளுக்குச் செல்வது சிரமமாக உள்ளது. ராமன் தெருவழியாக பஸ் இயக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிடம் கோரிக்கை விடுத்தால் இந்த பகுதி சாலை குறு சாலையாக உள்ளது பதில் கூறுகின்றனர். இதே சாலை வழியாகத்தான் திருப்புறம்பி ஏரகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல்மூட்டைகளை கொத்தங்குடி, நீலத்த நல்லூரில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு லாரிகள் முலம் கொண்டு செல்கின்றனர். எனவே, கும்பகோணத்திலிருந்து கொத்தங்குடி வழியாக திருப்புறம்பியம் வரை மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.