இந்திய ஒலிம்பிக் வீரர்களின் உணவு
இந்திய ஒலிம்பிக் வீரர் குழுவோடு பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், ஃபிசியோ தெரபிஸ்ட் , மனநல நிபுணர்கள் இவர்களோடு முதன்முறையாக சத்துணவாளர்களும் சென்றுள்ளனர். ஏனெனில் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் சரியான உணவு உண்ண வேண்டும். புதிதாக எதையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. இந்திய உணவு கிடைக்க வில்லையென்றால் அதற்கு இணையானதை தர வேண்டும். ஒலிம்பிக் நகரில் உலக வகை, ஐரோப்பிய வகை, ஹலால் மற்றும் ஆசிய வகை என நான்கு வகை உனவுகள் தரப்படுகின்றன. திடீரென வீரர்கள் தளர்வு அடைந்தாலோ அல்லது நோய் வாய்ப்பட்டாலோ அவர்களது உணவில் மாற்றம் செய்ய வேண்டும் என்கிறார் குழுவுடன் சென்றிருக்கும் சத்துணவாளர் ஆராதனா ஷர்மா. ஒவ்வொரு வகை விளையாட்டிற்கும் ஒவ்வொரு வீரருக்கும் கூட தகுந்தாற்போல் சத்துகள் சேர்ந்த உணவு தரப்பட வேண்டும். ஒரு விளையாட்டு வீரருக்கு 3000 கலோரி ஆற்றல் தேவையென்றால் அதற்கான புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைடிரேட் ஆகியவற்றை கணக்கிட வேண்டும். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க வேண்டிய விளையாட்டு என்றால் 60-65% ஆற்றல் கார்போஹைடிரேட்டிலிருந்து வர வேண்டுமாம். சக்தி அதிகம் செலவழியும் விளையாட்டிற்கு புரதம் கூடுதலாக வேண்டும். விளையாட்டு வீரரின் சக்தி ஒரு நாளில் உண்டாக்கப்படுவதல்ல. சில மாதங்களுக்கு முன்பாகவே அவர்களுடய உணவுப் பட்டியல், அவர்கள் தொடர்பான தரவுகள் ஆகியவற்றை பெற்று திட்டமிடப்படுகிறது. இறுதி நேரத்தில் தேர்வாகிறவர்களுக்கும் அவர்களுடய உணவு, ஒவ்வாமை, விருப்பங்கள் ஆகியவற்றை பெற்றுவிடுகிறோம் என்கிறார் ஷர்மா. இறுதியாக உணர்வு ரீதியான தொடர்புகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஐந்து அல்லது பத்து நாள்களுக்கு ஒரு முறை அவர்கள் விரும்புகின்ற உணவும் தரப்படுமாம். இதற்கு ‘ஏமாற்று நாள்’ அல்லது ‘திருட்டு நாள்’ (cheating day) என்கிறார்கள். போட்டிகள் முடிந்த பின் அவர்கள் விருப்பம் போல் சாப்பிடலாம்.
பழைய சோடா டப்பியிலிருந்து ஹைடிரஜன் ஆற்றல்
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மறு சுழற்சி செய்யப்பட்ட பழைய சோடா டப்பிகள், காஃபீன் மற்றும் கடல் நீரை பயன்படுத்தி ஹைடிரஜன் எரிபொருளை தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வு ‘Cell Reports Physical Science’ என்கிற இதழில் வெளிவந்துள்ளது. பழைய சோடா டப்பியிலுள்ள அலுமினியம் தண்ணீரைப் பிரித்து ஹைடிரஜன் வாயுவை வெளிவிட வைக்கிறது. கஃபீனிலுள்ள இமிடசோல் எனும் வேதிப்பொருள் வினையை விரைவுபடுத்தி 2 மணி நேரத்தை 5 நிமிடங்களாக குறைக்கிறது. ஒரு பிரச்சனை என்னவென்றால் இந்த வினையில் அலுமினியம் ஆக்சைட் உண்டாகி வினையை தடுக்கிறது. இதை சரி செய்ய அலுமினியத்துடன் காலியம் மற்றும் இண்டியம் சேர்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை கடல் மற்றும் நீருக்கடியில் செல்லும் வாக சோதிக்க உள்ளார்கள். எதிர்காலத்தில் சரக்கு வாகனங்கள், தொடர்வண்டிகள் மற்றும் விமானத்தில் கூட எரிபொருளாக பயன்படுத்தலாம்.
ஆண் வலி வேறு பெண் வலி வேறா?
ஆண்களும் பெண்களும் வலியை வெவ்வேறு விதமாக உண்ர்கிறார்கள். இதன் காரணத்தை ஓர் ஆய்வு வெளிக்கொண்டு வந்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வலி ஆய்வாளர் ஃப்ராங்க் பொரெசியா குழுவினர் வலியை தெரிவிக்கும் நாய்சிசெப்ட்டார் எனும் நரம்பு செல்களில் ஆய்வை மேற்கொண்டனர். எலி, குரங்கு மற்றும் மனித திசுக்களில் புரோலாக்டின் எனும் ஹார்மோனும் ஒராக்சின் பி எனும் நரம்புணர்வு கடத்தியும் சோதிக்கப்பட்ட போது, நரம்பு செல்கள் அதிக கூருணர்வு கொள்வது தெரியவந்தது. மூன்று இனங்களிலும் புரோலாக்டின் பெண்பாலில் அதிக அளவு தூண்டுதல் ஏற்படுத்துகிறது. ஒராக்சின் இதற்கு நேர்மாறாக ஆண்பாலில் அதிக விளைவுகளை ஏற்படுத்தியது. எனவே வலி தொடர்பான மருந்துகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தகுந்தாற்போல் கொடுக்கப்படலாம். இந்த ஆய்வு ஜூன் 3ஆம் தேதியிட்ட பிரைன் (‘BRAIN’) இதழில் வந்துள்ளது. இந்த இரண்டு பொருட்கள் குறித்து மேற்கொண்டு ஆய்வுகள் செய்தால் வலிகளை சமாளிக்க நல்ல வழி கிடைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் வலி என்பது பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவு; வேறு பல பொருட்களும் இதே விளைவுகளை தரலாம். எனவே இந்த இரண்டு பொருட்கள் மட்டுமே தனித்துவமானது என்பதை கேள்விக்குள்ளாக்குகிறார் சிக்காகோ மருத்துவக் கழகத்தை சேர்ந்த ரிச்சர்ட் மில்லர்.
காச நோய் கண்டறிய எளிய சோதனை
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 480000 நபர்கள் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மேலாக அறிவிக்கப்படாமல், கண்டுபிடிக்கப்படாமல், அரை குறையாக கண்டுபிடிக்கப்படுவது அல்லது தனியார் துறையில் சிகிச்சை எடுப்பது என ஒரு மில்லியன் நோயாளிகள் உள்ளனராம். 2025க்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கும் அரசின் திட்டம் தேக்க நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார். எனவே விரைவாகவும் செலவில்லாமலும் காச நோய் கண்டறியப்பட வேண்டும். இதற்கான ஒரு புதிய தொழில்நுட்பத்தை திப்ருகாரிலுள்ள ஐசிஎம்ஆர் - ஆர்எம்ஆர்சிஎன்இ (ICMR-RMRCNE) நிறுவனம் வளர்த்தெடுத்துள்ளது. இந்த முறையில், நோயாளிகளின் எச்சிலிலுள்ள டிஎன்ஏவை பயன்படுத்தி காச நோயை ஏற்படுத்தும் பேக்டீரியா காணப்படுகிறது. இந்த முறையில் இரண்டு மணி நேரத்தில் 1500 மாதிரிகளை சோதிக்க முடியும். மேலும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய இயலும். இது மிக எளிமையானது என்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சோதிக்க முடியும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். இந்த முறைக்கு ‘ கிரிஸ்பர் காஸ் அடிப்படையிலான காச நோய் கண்டறிதல்’’ (a CRISPR Cas based TB detection system) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு இந்த முறை பரவலாக்கப்படும். அந்த நிறுவனங்களுக்கு தேவையான நிபுணர் உதவியும் ஐசிஎம்ஆர் அளிக்கும்.