மதுரை, நவ.10- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலை யில் வியாழனன்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைசெய்து வந்தனர். நவம்பர் 10 வியாழனன்று வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் உள்ள இரண்டு கட்டிடங்களில் வேலைசெய்து வந்தனர். பகல் 12.30 மணி யளவில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தக் கட்டடம் முழுவதும் சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி (50), வல்லரசு (18), கோபி (19) மற்றும் புளிய கவுண்டன்பட்டி மகாலட்சுமி (50), அழகு சிறையைச் சேர்ந்த பிரேமா (50), விக்னேஷ் (19) ஆகிய 6 தொழிலாளர்கள் பலியாகினர்.
மேலும் அழகுசிறையைச் சேர்ந்த அங்கம்மாள், கருப்பசாமி, நாகலட்சுமி, மகா லெட்சுமி, ஜெயப்பாண்டி, பச்சையக்காள், கருப்பசாமி, அன்னலட்சுமி, மாயத்தேவர், பாண்டியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி, திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருமங்கலம், சிந்துபட்டி காவல்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், திருமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
முதல்வர் இரங்கல் - இழப்பீடு அறிவிப்பு
மதுரை அழகுசிறை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர், வெடி விபத்து குறித்து செய்தி கேட்டு மிகுந்த வேதனை யடைந்ததாக தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.