விவசாயிகள் - மாணவர்கள் கலந்துரையாடல்
தஞ்சாவூர், ஏப்.22- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரம் துவரங்குறிச்சி கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் துவக்க விழா, துவரங்குறிச்சி பராசக்தி மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களை வாழ்த்தினார். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்கள்- விவசாயிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் வேளாண்மை குறித்த சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர். அப்போது, மாணவர்கள் புதியவேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் குழு தலைவர் ராமசந்திரன் மற்றும் விஷ்ணு பிரசாத், ஊர் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
அரியலூர் நகர வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்
அரியலூர், ஏப்.22- அரியலூர் நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே15-க்குள் கட்டாயம் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையர்(பொ)அசோக்குமார் தெரிவித்தார். அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில், அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு, தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். தமிழ்ப்பெயர் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் மற்ற மொழி எழுத்துகளைவிட பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும். பெயர்ப் பலகை தமிழில் அமைப்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது, முதல் முறை அபராதமும், 2 ஆம் முறை முரண்பாடு கண்டறியப்படின் நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். கூட்டத்தில், துப்புரவு ஆய்வாளர் தர்மராஜ், அரியலூர் நகர வணிகர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.