tamilnadu

img

64 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புக!

சென்னை, ஜூன் 27 - 64 ஆயிரம் பணியிடங்களை நிரப்பக்கோரி வெள்ளியன்று (ஜூன் 28)  மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சென்னையில் வியாழனன்று (ஜூன் 27) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 3 கோடி வீடு மற்றும் வணிக இணைப்புகளும், 30 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் உள்ளன. திமுக அரசு பதவி யேற்ற பிறகு 1.50 விவசாய மின் இணைப்புகளை வழங்கி உள்ளது. தற்போது வாரியத்தில் ஆரம்ப கட்ட பணியிடங்கள் உள்ளிட்டு 64 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டு களில் மேலும் 8 ஆயிரம் பேர் ஓய்வு பெறும் நிலை உள்ளது. காலிப்பணியிடங்களால், களப் பிரிவில் ஊழியர்கள் கூடுதல் பணிச் சுமையோடு பணி  செய்கின்றனர். ஒப்பந்த ஊழியர் முதல் மின்பாதை  ஆய்வாளர் வரை தினசரி விபத்திற்கு உள்ளா கின்றனர் உயிரிழக்கின்றனர். திமுக அரசு 3 ஆண்டு களாக காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஒப்பந்த  ஊழியர்களைக் கூட நிரந்தரம் செய்ய மறுக்கிறது. பணியிடங்களை நிரப்புவது குறித்து  சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிப்பார் கள் என்று எதிர்பார்த்தோம். இதற்கு மாறாக, ஒன்றிய அரசு உதவியோடு,  500 பட்டய பொறியாளர்களுக்கு (டிப்ளமோ) ஓராண்டு பயிற்சி அளித்து பயன்படுத்த உள்ள தாக தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல. மேலும் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பசுமை மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள். நிரந்தர  ஊழியர்களை நியமிக்காமல் விட்டால் படிப்படி யாக மின்சாரவாரியம் தனியார்மயமாகும். எனவே, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், மின்வாரியத்தை மேலும் பிரிக்க வகை செய்யும் அரசாணைகளை திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜூன் 28 (இன்று) வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜூலை 9 அன்று சென்னை தலைமை அலுவலகம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அமைப்பின் தலைவர் தி.ஜெய்சங்கர், பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.