அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
அரியலூர், ஜுன் 28- அரியலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வர்(பொ) பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் காவல் ஆய்வாளர் ஆ. சித்ரா கலந்து கொண்டு பேசுகையில், போதைப் பழக்கம் உள்ள பெரும்பாலானோர், திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த போதைப் பழக்கத்தால் சீரழிந்து கிடக்கிற மாணவர்களையும், இளைஞர்களையும் மீட்டெடுப்பதற்காகதான் `போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இது சமுதாய நலனுக்கான சிறந்த திட்டமாகும். எனவே படிக்கும் மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல், நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு, வீட்டுக்கும், சமுதாயத்துக்கும் நற்பெயரை எடுக்க வேண்டும் என்றார். பின்பு, மாணவ, மாணவிகளுக்கு போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, கல்லூரி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. முனைவர் கி.பழனிசாமி வரவேற்றார். முனைவர் சு.சுமதி நன்றி கூறினார்.