பர்வீன்பானு மகள்களுக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை
பாலியல் வன்கொலை செய்யப்பட்ட
அறந்தாங்கி, ஜூலை 21- புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயல்வீரர்கள், கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி கிளை மர்கஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாநிலச் செயலாளர் அன்சாரி, முஹம்மது மக்தூம் தவ்ஹீதி, சித்திக் ரகுமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே காரணியேந்தல் என்ற ஊரை சேர்ந்த பர்வீன் பானு என்ற பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது. கைது செய்யப்பட்ட காளிதாசுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க தமிழக அரசு மற்றும் காவல்துறையை கேட்டுக் கொள்கிறோம். மேலும் தந்தை, தாயை இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கி, பர்வீன் பானுவின் இரு மகள்களுக்கும் அரசு வேலை வழங்குவதாக கூறிய நிலையில், வேலை வாய்ப்பை உடனடியாக வழங்குமாறு இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.