நீலகிரியில் தொடர் கனமழை: குந்தா அணை நிரம்பியது
உதகை, ஜூன் 17 - வானிலை ஆய்வு மையம் ஜூன் 17 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்திருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, அவலாஞ்சியில் 207 மி.மீ., பார்சன்ஸ் பள்ளத்தாக்கில் 106 மி.மீ., அப்பர் பவானியில் 99 மி.மீ., பந்தலூர் மற்றும் செரங்கோடு பகுதிகளில் தலா 68 மி.மீ., கூடலூரில் 57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக உதகை அருகே தலைகுந்தா - காந்திநகர் சாலையில் பெரிய மரம் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் கார் மீது விழுந்தது. இதில், ஆட்டோ மற்றும் கார் சேதமடைந்தன. சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். மேலும், கூடலூர் பகுதியில் உள்ள குக்கிராமங்களில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக பெய்த பலத்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாத நிலவரப்படி நீலகிரி அணைகளில் 30 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்த நிலையில், தற்போது அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா, குந்தா, கெத்தை, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பெரும்பாலான அணைகளில் 85 சதவீத தண்ணீர் இருப்பு உள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் அவலாஞ்சியில் 150 செ.மீ., அப்பர் பவானியில் 100 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் வினாடிக்கு 200 முதல் 300 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அதை திறக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.