சென்னை, ஏப்.26 - தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்துக் கழ கங்களில் காலியாக உள்ள பணியிடங் களை நிரப்ப வேண்டும், நிரந்தர பணி யிடங்களான ஓட்டுநர் நடத்துநர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கக் கூடாது என வலியுறுத்தி ஏப்.18 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தது. அதில், மே 3 அல்லது அதற்கு பிறகு 6 வாரத் திற்குள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ஏப்.20 அன்று பிறப்பித்த அறிவுறுத்தலில், “ஏப். 26 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொழிலாளர் பணி நிலைமைகளில் எந்த வித மாற்றமும் நிர்வாகம் செய்யக் கூடாது” என்று அறிவுறுத்தி இருந்தது. இதற்கு மாறாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழ கத்தில் 100 ஓட்டுநர்களை நியமித்துள்ளது. இதனைக் கண்டித்து புதனன்று (ஏப்.26) தொழிலாளர் ஆணையரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், “போக்குவரத்து கழ கங்களில் 2 கோடி பேர் பயணிக்கின்றனர். இந்த போக்குவரத்து கழகத்தை சீரழிக்கும் நடவடிக்கையில் அரசும், நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்போவதாக அறிவித்தனர். அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதும், தனியார்மயம் இல்லை என்று அமைச்சர் கூறினார். அதன்பிறகு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை எடுக்க உள்ளதாக அறி வித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறை கூடாது என வேலைநிறுத்தம் செய்ய நோட்டீஸ் கொடுத்தோம். தொழிலாளர் துறை கொடுத்த அறிவுறுத்தலை மீறி ஓட்டுநர்களை நியமித்துள்ளது. எனவே, போக்குவரத்து துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாணைப்படி ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்சம் 830 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் ஓட்டுநர்களுக்கு 513 ரூபாய் தருகிறார்கள். பணி நிரந்தரம் செய்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிப்பது மோசடியானது. ஒப்பந்த முறை, தனியார் மயம் தமிழகத்தை சீரழிக்கவே பயன்படும். எனவே, இந்த நடவடிக்கைகளை கைவிட மறுத்தால் அனைத்து சங்கங் களும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். பிற தொழிற்சங்கங்கள் அடுத்தடுத்து வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை யில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
தொழிலாளர் தனி இணை ஆணையர் வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்மேளன பொதுச் செயலாளர் ஏ.ஆறுமுகநயினார், நிர்வாகி கள் ஆர்.துரை, வி.தயானந்தம், கனகராஜ் உள்ளிட்டோரும், நிர்வாகம் சார்பில் பொது மேலாளர்கள் இளங்கோ (மதுரை), தட்சிணா மூர்த்தி (காஞ்சிபுரம்), கோவிந்தராஜ் (கும்பகோணம்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, சிறப்பு இணை ஆணையர் வேல்முருகன், விரைவு போக்கு வரத்து கழகத்தில் 58 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுத்தது விதி மீறல். இதன்மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆகவே, இதை நிறுத்தி வைக்க வேண்டும். தற்போதுள்ள பணி நிலைமைகளில் மாற்றம் செய்யக்கூடாது. அடுத்த பேச்சுவார்த்தை மே 5 அன்று நடைபெறும். அந்தப்பேச்சுவார்த்தையில் 8 கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.