tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்கக்கோரி சிஐடியு மறியல்

ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு  தினக்கூலி வழங்கக்கோரி சிஐடியு மறியல்

திருச்சிராப்பள்ளி, செப். 23-  மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய் அன்று மாநிலம் தழுவிய மறியல் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, திருச்சி பெருநகர் வட்டம் சார்பில், மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், திட்ட நிர்வாகிகள் பழனியாண்டி, இருதயராஜ், எஸ்.கே.செல்வராஜ், கண்ணன், கோட்ட செயலாளர்கள் ராதா, நாகராஜன், ரியாஜூதீன், ரவிச்சந்திரன், செல்வம், மணிகண்டன், ஜெசிந்தா ரோஸ்லின்மேரி, ஸ்டாலின் உள்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே.முகமதலிஜின்னா, வட்டத் தலைவர் கு.நடராஜன், பொருளாளர் டி.விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர். திருவாரூர்  திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, திட்ட தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமை வகித்தார்.  தஞ்சை மண்டலச் செயலாளர் கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி, மாவட்ட தலைவர் எம்.கே.என். அனிபா, மாவட்டப் பொருளாளர் கே.கஜேந்திரன் மற்றும் அமைப்பின் திட்ட பொருளாளர் கே. முகேஷ் மற்றும் மன்னார்குடி, திருவாரூர்  கோட்ட நிர்வாகிகள், மின்ஊழியர்கள் மத்திய அமைப்பின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், கேங்மேன்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பெரம்பலூர்  பெரம்பலூர் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) சார்பில் போராட்டம் நடைபெற்றது.  அமைப்பின் திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். தொடர்ந்து பெரம்பலூர் - அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.